Gold Rate: கிராமுக்கு ரூ.13,000-ஐ தொட்ட தங்கம்; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய தங்...
கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?
கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது.
இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.
சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க மேயருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து அரசியல் ரீதியான எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பா.ஜ.க தலைவர் வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது.
வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் பினராயி விஜயனின் தனி உதவியாளரை வி.வி.ராஜேஷ் போனில் அழைத்திருந்தார்.
அப்போது முதல்வர் அருகில் இல்லாத காரணத்தால் பிறகு இணைப்பு வழங்குவதாக உதவியாளர் தெரிவித்தார்.

முதல்வர் வந்த பிறகு வி.வி.ராஜேஷுக்கு போன் கணெக்ட் செய்தார் உதவியாளர். அப்போது பேசிய வி.வி.ராஜேஷ், தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், பதவி ஏற்ற பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
'ஆகட்டும், வாழ்த்துகள்' என முதல்வர் பதிலளித்தார். ஆனால், முதல்வர் போனில் அழைத்து வி.வி.ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதன் பின்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.
அது உண்மைக்குப் புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மீரியாக்கள் செய்தியைத் திருத்தும் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















