`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீ...
`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சா நந்தினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், குழந்தையை ஈன்றெடுக்கும் தாய்க்கும், தத்தெடுக்கும் தாய்க்கும் இடையே வேறுபாடு காட்டுவது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி தவறானது.
ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை.
இதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4), அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளுக்கு முரணானது. எனவே, சட்டப்பிரிவு 60(4) ரத்து செய்யப்படுகிறது.

மேலும், தாய்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பைபோல, தந்தைக்கான விடுப்பையும் சமூக பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்ட விதியை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.



















