கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் ...
`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!
சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அதை கண்டிக்க வேண்டிய கட்சிகள் தி.மு.க-வுடன் கைகோத்து நிற்கின்றன. `பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்' என்று சொல்லும் துணிச்சல் அந்த கூட்டணியில் உள்ள யாருக்காவது இருக்கிறதா? கொடுப்பதைக் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று இருக்கிறார்கள். அதை விடவும், அண்ணா அறிவாலயம் பக்கத்தில் யாராவது நிழலுக்காக ஒருங்கினால்கூட, 'கூட்டணிக்கு வாங்க' என்று அழைக்கும் அவல நிலையில் தி.மு.க இருக்கிறது" என்று தமிழிசை பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் சத்தமாக, "யம்மா ஒரு நிமிஷம்... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை எங்கே? சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை எங்கே?" என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார். அதைக் கேட்காததுபோல தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்மணி விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரது கவனமும் அவர் பக்கமாகத் திரும்பியது. அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க ஆண் நிர்வாகிகள் சிலர், அந்த மூதாட்டியை கூட்டத்தை விட்டு அப்புறப்படுத்தும் நோக்கத்தில் தள்ளினார்கள். ஆனால் அவரோ விடாமல் தனது கேள்வியை தமிழிசை நோக்கி முன்வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தினரின் கவனம் திசைதிரும்பிவதைப் புரிந்துகொண்ட தமிழிசை, "அதாவது தமிழ்நாட்டில் வேலை கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்டாலின் வேலை செய்ய வேண்டும். இன்னொன்று பிரதமரோடு சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும். நமது தமிழ்நாட்டின் அடிப்படைத் தன்மை என்னவென்றால்... அம்மா முதலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அம்மா ஒரு பெண் குழந்தை செத்துக் கிடக்குது. அதை முதலில் பாருங்கன்னு நான் சொல்றேன். அப்படி ஒன்னா இருந்து பார்க்காததால் தான் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, அந்த மூதாட்டி அங்கிருந்த கட்சியினரால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "விளாத்திகுளம் கொடூரச் சம்பவத்தின் குற்றவாளி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய மக்களிடம் கிண்டல் கேலி பேசியுள்ளார்கள். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாதது குறித்து கவலைப்படாமல் ரீல்ஸ் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார், முதல்வர். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.59% போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது.129% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் தண்டனை 10% குற்றவாளிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பெண்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் துணை நிற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் 8690 கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் இயற்கை உபாதை கழிக்கக்கூட வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வருவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கி விட்டோம் என்ற திமிரில் தி.மு.க ஆட்சி இருந்து வருகிறது. பெண்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திமிரி எழுந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கொலைகளும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்டாலின் ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்றார்.














