கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் ...
`நடக்கக்கூட முடியலை, மாசம் 20 நாள் ஆஸ்பத்திரியில... எதுக்கு பதவி வெறி!' - ஓபிஎஸ்-ஸைச் சாடும் டிடிவி
தஞ்சாவூரில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது, ``2021ல் நாங்கள் பிரிந்து கிடந்தோம். நீங்கள் எளிதாக ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போது ஜெயலலிதாவின் பிள்ளைகள் ஓரணியில் திரண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அமமுக, அதிமுகவுடன் கரம் கோத்திருக்கிறது.

எந்த ஒரு கோரிக்கையும், நிபந்தனையும் வைக்கவில்லை. ஏன் நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை என முடிவு எடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற இந்த மக்கள் விரோத தீய ஆட்சி, வருங்கால சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கிற, ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே காரணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன். அப்போது தான் வருங்கால தமிழகம் வளம் பெற முடியும். அதற்கு ஜெயலலிதாவின் ஆட்சி தான் ஒரே வழி என்பதால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.
சிலரை போல சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் நாங்கள் செல்லவில்லை. அமித்ஷா, மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை டெல்லிக்கு அழைத்தார். அப்போது, நீங்கள் 2021ல் எங்களோடு கூட்டணிக்கு வர வேண்டும் என்றேன், நீங்களும் சரி என்றீர்கள். ஆனால் அவர்கள் அன்றைக்கு தேவையில்லை என்றார்கள். அதனால் ஜெயலலிதா ஆட்சி வரமுடியாமல் போனது. தற்போது அதிமுக தலைவர்கள் அமமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். பேசி அழைத்து வாருங்கள் என்கிறார்கள் என சொன்னார்.

இதை அமித் ஷா மத்தியசத்திற்கு எதற்கு வர வேண்டும் என சிலர் பேசினார்கள். இருவருக்குள் சண்டை இருந்தால் மதிக்கத்தக்க இன்னொரு பெரிய மனுஷன் பிரச்னையை தீர்த்து வைப்பார்கள். அதுபோல் அமித் ஷா, என்னை அழைத்து இபிஎஸ் மனப்பூர்வமாக அழைக்கிறார் என்றார். நானும், 2021ல் சொன்ன அதே பதிலை சொன்னேன். உறுதியாக கூட்டணிக்கு வருகிறோம். எங்களுக்குள் இருந்த மனவருத்தங்களை தூக்கி எரிந்து விட்டு அமமுக, அதிமுக நலனையும் கருத்தில் கொண்டு இணைவதாக அமித் ஷாவிடம் சொன்னேன்.
நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். சிலரை போல் ஜெயலலிதாவால் பதவி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற்று, அமைச்சர், முதலமைச்சர் என பதவிகளை பெற்று முகவரி பெற்று பொருளாதாரத்தில் டாடா பிர்லாவாக மாறவில்லை. ஊரையே விலைக்கு வாங்கும் வகையில் பணத்தை சேர்த்து விட்டு இன்றைக்கு பாதுகாப்பிற்காக பல காரணங்களை சொல்லி அதிமுக சரியான கட்சியாக இல்லை என்று பொய் பிரசாரம் செய்து, என்னை சேர்த்து கொள்ளுங்கள் நான் தொண்டனாக இருக்கிறேன் என நரி வேஷம் போட்டு நடித்து எங்கோ போய் சேர்ந்திருக்கிறார்.
ஜெயலலிதா படத்தை பையில் வைத்திருந்தவர்கள், வீட்டில் மாட்டியிருந்தவர்கள் எல்லாம் அந்த படத்தை தூக்கி எரிந்து விட்டு பதவி வெறியில் திமுகவோடு சென்று விட்டனர். எம்.ஜி.ஆர் எந்த இயக்கத்தை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா எந்த இயக்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகள் போராடினாரோ அந்த தீய சக்தி திமுகவிடம் சென்று விட்டனர். தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டு சென்றுள்ளனர். உங்களுக்கு எத்தனையோ மனக்குறைகள் இருக்கலாம், மூன்று மாதம் அமைதியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு என்ன வயதாகிறது, இளைஞரா? உங்களால் நடக்கக்கூட முடியவில்லை, மாதம் 20 நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் உங்களுக்கு ஏன் இப்படி பதவி வெறி.
உங்களை தரக்குறைவாக சொல்லவில்லை. மனவருத்தத்தில், பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன். எங்களுக்கும் எத்தனையோ மனக்குறை வருத்தம் இருந்தது. தனி இயக்கம் கண்டோம். ஒன்பது ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக இருந்ததில்லை. பலர் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக சொன்னார்கள். ஒரு நாள் கூட நாங்கள் அப்படி நினைத்ததில்லை. எதற்கு இதை சொல்கிறேன் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைந்து விட்டதால் திமுக இங்கிருந்து சென்றவர்கள், இரட்டை இலையில் போட்டியிட்டு பூனைப்படை நடத்தியவர்களை தூண்டி விட்டு நம் இணைப்பை பெட்டிக்காக பதவிக்காக இணைந்ததாக பேச வைக்கின்றனர். திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இணைந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கு எதிரான, நரகத்திற்கு ஈடான திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம். நம் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு வீடாக சென்று மோடி, அண்ணன் இபிஎஸ் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். தமிழ் நாட்டின் நலனுக்காக இதை செய்ய வேண்டும். நானும் டெல்டாகாரன் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு எதையாவது செய்து தந்திருக்கிறாரா. விலைவாசி விண்ணை முட்டி உயந்துள்ளது. அனைத்து தொழிலும் பாதிப்படைந்துள்ளன. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையில் முதல்வர் குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்கிறது. கொடுங்கோல் ஆட்சி முடிவிற்கு கொண்டு வர நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.














