அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி...
கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள்," கடந்த சில நாள்களாக கடைகள் மற்றும் வீடுகளில் சிறிய அளவிலான கருப்பு ஈக்கள் போன்று லட்சக்கணக்கில் பூச்சிகள் வருகின்றன. இதனால் வீட்டில் உள்ள உணவுப்பொருள் அனைத்தும் வீணாகி வருகிறது. மின் விளக்குகளைச் சுற்றிலும் வட்டமிடும் இவை கண், காது, மூக்கு என புகுந்து விடுகின்றன. கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனை மற்றும் கொட்டகம்பை பகுதியில் இருந்து இவை அதிகளவில் வந்த நிலையில், தற்போது அரவேனு பகுதியிலும் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.

பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ளைத் தாள்களில் எண்ணெயைத் தடவி வைத்து இவற்றை கட்டுப்படுத்தி வருகிறோம். அப்படியிருந்தும் முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் திடீரென இவ்வளவு பூச்சிகள் வருவதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்" என்றனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம், " பூச்சியியல் நிபுணர்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்கிறோம். பூச்சியின் இனம் மற்றும் காரணம் குறித்து பின்னர் தெரிவிக்கிறோம்" என்றனர்.


















