செய்திகள் :

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்...'- அமைச்சர் சம்பத்

post image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத் குமார், “மக்களின் சுகாதாரத்திற்கு முதலமைச்சர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். சில இடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றார்.

மருத்துவர் பற்றாக்குறை குறித்து கேட்டபோது, “அனைத்து துறைகளிலும் இல்லாமல் சில துறைகளில் மட்டும் பற்றாக்குறை உள்ளது. அதற்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாக நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர், பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது குறித்து தகவல்கள் வந்துள்ளன. முழுமையான ஆய்வுக்குப் பிறகே உண்மை நிலை தெரியவரும்” என்றார்.

குடிநீர், சுடுநீர், நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாலைகள், பாதுகாப்பு வசதிகள், உறவினர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கைதிகள் தங்கும் அறைகள் மற்றும் காவலர்கள் அறைகள் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும், “15 முதல் 20 நாள்களுக்குள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதய நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருவதால் காத்திருப்பு பட்டியல் அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் தேவையான படுக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆய்வின் போது ஸ்கேன் மையம், எக்கோ பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, கேன்டீன், கைதிகள் சிகிச்சைப் பிரிவு, காவலர் தங்கும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டன.

“மருத்துவமனையில் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன். இது முதல் நாள் ஆய்வு மட்டுமே. இனிமேல் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். அடுத்த முறை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்வேன்” என்றும் அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்தார்.

புகார் பெட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “மொபைல் போன் மூலமாகவே மக்கள் எளிதாக குறைகளை தெரிவிக்கக்கூடிய அமைப்பை உருவாக்க உள்ளோம்” என்றார்.

அரசு மருத்துவமனையில் லஞ்சம் அல்லது முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அமைச்சர், “யாராக இருந்தாலும் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

கோவையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அவர், “கல்வி, மருத்துவம், தொழில், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத பல நல்ல மாற்றங்கள் கோவையில் நடைபெறும்” என்றார்.

கோவை மெட்ரோ திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வருவது எங்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' - நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செய... மேலும் பார்க்க

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களு... மேலும் பார்க்க

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிற... மேலும் பார்க்க

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் கர்நா... மேலும் பார்க்க

பக்ரீத்: ``உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை.!" - நீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா

இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூல... மேலும் பார்க்க