Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" - சூர்யா எமோஷ...
"கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை" - ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல்
கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 21-ம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணியளவில் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.
காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் போது 250 சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (33) என்ற சிறுமியின் குடும்பத்திற்குப் பழக்கமான அண்டை வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க மேல் மாடியில் இருந்து குதித்ததில், அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னந்தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் நடைபெற்ற விசாரணையில் பாரதிபுரம், பள்ளபாளையத்தைச் சேர்ந்த மோகன் (30) என்பவர் குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை காரணமாக, 24 மணி நேரத்திற்குள் வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடற்கூராய்வின் முதல்கட்ட அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
கூலித் தொழிலாளியான கார்த்தி திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். பெற்றோர் உடன் சேர்ந்து சிறுமியைத் தேடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.
கார்த்தி மீது மட்டுமே போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளைத் துரிதமாகப் பிடித்தது போல, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

















