No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் ...
சமையல் சூப்பர் ஸ்டார்: "உணவே மருந்து என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்" - செஃப் தீனா
சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றது.
விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு என 12 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று இன்று (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்று வருகிறது.
அவள் விகடன் அமைத்துக் கொடுத்திருக்கும் அற்புதமான மேடையில் 38 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டுள்ளனர்.
போட்டியின் நடுவரான செஃப் தீனா, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் நந்தினி, ஸ்ரீ ஜனனி கேட்டரிங் சர்வீஸ் சார்பில் M. S. ஹரீஷ், போட்டியாளர்கள் துர்கா பாய் மற்றும் உமா மோகன்தாஸ் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
போட்டியாளர்களை வரவேற்று பேசிய செஃப் தீனா, “இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
சீசன் 3, முந்தைய சீசன்களை விட அதிக வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது. இந்த சீசனில் புதிய போட்டியாளர்கள் அதிகமாக இணைந்திருப்பது, இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக வரவேற்பைக் காட்டுகிறது.
இந்தச் சமையல் போட்டியின் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவைச் சமைப்பது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள திறமையான சமையல் கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதும்தான்.
'உணவே மருந்து' என்பதற்கேற்ப உடலுக்கு ஏற்ற உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும். இந்தப் போட்டியின் மூலம் பல புதிய சமையல் குறிப்புகளை நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.
‘உணவே மருந்து’ எனும் தலைப்பில் முதலாவதாக 20 போட்டியாளர்கள் தங்களது ரெசிப்பிகளைச் சமைத்து வருகிறார்கள்.
போட்டி விதிமுறைகளின்படி, இரண்டு மணி நேரத்தில், ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், சைட் டிஷ் மற்றும் டெஸர்ட் என நான்கு உணவுகளைச் சமைக்க வேண்டும். தற்போது போட்டியாளர்கள் ஆர்வமுடன் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சின்னத்திரை பிரபலங்கள், பவித்ரன், நவீந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.




















