"சாதி இல்லை என்பதுதான் பெருமை" - சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திர...
தெலங்கானா: நிறைவேறாத காதலால் தற்கொலை; இறந்த மகனுக்கு 23 ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!
தெலங்கானாவில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மகபூபாபாத் மாவட்டத்தில், 2003ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் ராம் கோட்டிக்கு, லாலுவும் சுக்கம்மாவும் ஆண்டுதோறும் திருமண விழாவை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராம் கோடி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் காதலித்த இளம் பெண்ணும் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

இதனால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தச் சோகம் ராம் கோடியின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்தது. தங்கள் மகனின் நினைவை மங்க விடாமல், அவரைத் தங்களுடன் நெருக்கமாக வைத்திருக்க அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.
இது குறித்து சுக்கம்மா கூறுகையில், ''எங்கள் மகன் மரணத்திற்குப் பிறகு எங்களது கனவில் தோன்றி கோயில் கட்டி அவர்களது திருமணத்தை நடத்தச் சொன்னார். இதையடுத்து எங்கள் வீட்டிற்குள் சிறிய கோவிலைக் கட்டி இருக்கிறோம்.
எங்கள் மகன் மற்றும் அவர் விரும்பிய பெண்ணின் சிலைகளை நிறுவி இருக்கிறோம்'' என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்றும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து இருவருக்கும் பாரம்பர்ய முறைப்படி திருமணத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சடங்கு உண்மையான திருமணத்தைப் போலவே, பிரார்த்தனைகள், பிரசாதம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் செய்யப்படுகிறது. தெலுங்கானாவில், ஸ்ரீராம நவமியன்று ராமர் மற்றும் சீதையின் திருமண சடங்குகள் மிகவும் விமரிசையாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பாரம்பர்யத்தால் ஈர்க்கப்பட்டு, பெற்றோர் சிலைகளை தெய்வீக வடிவங்களாகக் கருதி, அதே முறையில் தங்களது மகனின் திருமண விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் ஒட்டுமொத்த கிராமத்தினரும் கூடுகின்றனர்.


















