மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும்...
சிகரெட் வியாபாரியை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள் - 7 கி.மீ விரட்டிப் பிடித்த போலீஸார்!
தூத்துக்குடியில் எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். சிகரெட் மொத்த வியாபாரியான இவர், மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர், அவரிடம் சிகிரெட் கேட்டுள்ளனர். ஆனால், `நான் மொத்த வியாபாரி.

சில்லறைக்கு சிகிரெட் விற்பனை செய்ய முடியாது' எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த இருவரும் தினகரனை கீழே தள்ளிவிட்டு கத்தியால் அவரது நெற்றிப் பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீஸார், காயமடைந்த தினகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தினகரனை தாக்கிய இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் ஒரே பைக்கில் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து இருவரையும் பிடிக்கச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் பைக்கில் இருவரும் வேகமாகச் செல்ல, போலீஸாரும் அவர்களை பின் தொடர்ந்தனர். சுமார் 7 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், பாக்கியலெட்சுமி நகரைச் சேர்ந்த பிரேம்குமார், பாத்திமாநகரைச் சேர்ந்த அந்தோணி பென்கர் அவர்கள் என்பது தெரிய வந்தது. இதில், பிரேம்குமார் மீது குளத்தூர், ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளன. அதேபோல அந்தோணி பென்கர் மீதும் தென் பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து தினகரனின் செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















