மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி...
சுசீந்திரம்: ’சாவர்க்கருக்கும் தாணுமாலய சுவாமிக்கும் என்ன சம்பந்தம்?' – அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்
கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற மார்கழி தேர்த்திருவிழாவில் வடம்பிடிக்க வந்திருந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பாரத் மாதாகீ ஜெய் எனவும், வீர சிவாஜி, வீர சாவர்க்கருக்கு ஜெய் எனவும் சிலர் கோஷம் எழுப்பிய சம்பவம் நடைபெற்றது. இதைத்தொடந்து அமைச்சர் சேகர் பாபு டென்சனில் சில வார்த்தைகள் பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கலந்துகொண்டார். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுடன் கூறுகையில், "ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்தது பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குடி கொண்டிருக்கும் கோயில். அங்கு மார்கழி தேர்திருவிழா நடைபெற்றது. பா.ஜ.க-வும் ஒருசில மதவெறி அமைப்புகளும் சேர்ந்து, தேர் வடம் பிடிக்கும் சமயத்தில் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கர் வாழ்க என்று முழக்கம் போடுகிறார்கள். இது உண்மையிலேயே அங்கு வந்திருக்கக்கூடிய தாணுமாலய சுவாமி பக்தர்களை புண்படுத்தக்கூடிய செயல் ஆகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், சாதி ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்றும் குரல் கொடுத்ததற்காக மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சாவர்க்கர். சாவர்க்கருக்கும் தாணுமாலய சுவாமிக்கும் என்ன சம்பந்தம். பா.ஜ.க-வும் மதவெறி கும்பல்களும் திருக்கோயில்களில் நுழைந்து அங்கு இருக்கக்கூடிய மக்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு செல்லக்கூடிய முயற்சியை இது தெளிவாக காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கக்கூடியது. மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்றும் ஆகும்.

இது சம்பந்தமான நடவடிக்கை குறித்து காவல் துறை பார்த்துக்கொள்ளும். அதே சமயம் பொதுமக்கள் பார்க்க வேண்டும். பன்மைத்தன்மையில் ஒற்றுமை என்பதுதான் இந்த மண்ணின் பெருமை. அப்படிப்பட்ட தேசத்தில் சுதந்திரத்துக்காக போராடி மகாத்மா காந்தியை கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் பெயரைச் சொல்லி வாழ்க என்று பா.ஜ.க-வும் மதவெறிக் கும்பலும் முழக்கமிடுகிறார்கள் என்றால், மதத்தை வைத்து அரசியல் செய்வதைவிட வேறு என்ன நோக்கம் இருக்கிறது. இவர்களிடம் தமிழ்நாட்டு மக்களும், இந்திய மக்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும். கோயிலுக்குச் சென்று தாணுமாலய சுவாமி வாழ்க என்றுச் சொன்னால், சிவன் வாழ்க என்றுச்சொன்னால், பிரம்மா வாழ்க என்றுச்சொன்னால், விஷ்ணு வாழ்க என்றுச் சொல்லியிருந்தால் எல்லோரும் சேர்ந்து வாழ்க என்று சொல்லியிருப்பார்கள். எவ்வளவு பெரிய அவமானச் செயலை செய்கிறார்கள். அவர்களின் செயல் கடவுள் பக்திக்கு எதிரானது. ஒற்றுமையை விரும்பும் இந்து மக்கள் சார்பில் இதை நான் கண்டிக்கிறேன்.

ஆன்மீகத்தின் அடிப்படை என்பது மனிதநேயம். அது எந்தச்சூழ்நிலையிலும் வெறுப்பாகவோ, பிரிவினையாகவோ இருக்க முடியாது. இவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. மதவெறியை கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் தவறான செய்திகளை பரப்பி, மக்களை ஒன்றுபடுத்தி அதன்மூலமாக அரசியல் லாபம்பெற முயற்சிக்கக்கூடியவர்கள். தேர்தலை மையமாக வைத்துதான் இப்படிப்பட்ட பல பிரச்னைகளை உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். இதை மக்கள்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்த அரசு செய்ததுபோன்று இந்துசமய அறநிலையத்துறைக்கு வேறு அரசு செய்திருந்தால் சொல்லுங்கள், நாங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போகிறோம்" என்றார்.















