Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















