"அண்ணாமலை விமர்சனம் செய்தால், பதிலடி கொடுப்போம்!" - வரிந்துகட்டுகிறார் வினோஜ் பி...
டெல்லி போராட்டம்: "மாணவர்களின் தைரியமான, துணிச்சலான செயல் இது"- சல்மான் கான் ஆதரவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், புகைக்குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் பாலிவுட் நடிகர் சல்மான் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " இது மிகவும் அமைதியான முறையில் நடந்த ஒரு போராட்டமாக இருந்தது, ஆனால் இறுதியில் வன்முறையாக மாறியது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வினாத்தாள் கசிவு என்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனை. நமது நாட்டின் குழந்தைகள் ஒரு சிறந்த கல்வி முறைக்காக ஒன்றிணைந்து நிற்பதையும், அவர்களுக்குப் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவர்கள் எடுத்த இந்த முடிவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு, உண்மைத்தன்மை மற்றும் தீவிரமாகப் படித்துத் தங்கள் எதிர்காலத்தையும், ஒரு மகத்தான, கற்றறிந்த பாரதத்தையும் உருவாக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும் இது காட்டுகிறது.
இந்த போராட்டம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. மாணவர்கள் இதை மிகவும் அமைதியான முறையில் நடத்தியுள்ளனர். இது மிகவும் தைரியமான மற்றும் துணிச்சலான செயல். கல்வியை நோக்கி உந்தப்பட்ட இந்தத் தலைமுறை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்.

இந்தப் பிரச்சனை மாணவர்களுக்கும் கல்வி முறைக்கும் இடையிலானது. இதை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இதற்கான முழுப் பெருமையும் நமது நாட்டின் மாணவர்களையே சாரும். அரசு அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கி, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் நம்புகிறேன். இது இருதரப்பிற்கும் நன்மையான ஒன்றாகும்.
மாணவர்களுக்குச் சாதகமான, நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிப் பிரார்த்திக்கிறேன். கல்வி கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும். கல்விதான் அடுத்த 'ட்ரெண்ட்' மற்றும் 'ஃபேஷனாக' மாற வேண்டும். அது ஆண்டுக்காண்டு மேலும் பிரபலமடைய வேண்டும். எந்தளவுக்கு என்றால், வெளிநாட்டினர் அனைவரும் இந்தியாவில் வந்து படிக்கும் அளவுக்கு இந்தியா ஒரு சிறந்த கல்விக் கூடமாக மாற வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.




















