கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா...
ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து, ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர்." எனப் பாராட்டியிருந்தார்.
சமீப சில நாள்களாக அடங்கிருந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக விவகாரம் இப்போது மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``"பிரதமர் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டார். அவரது துரோகம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அவர் மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் அடைவார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்காமல், மோடி அரசு ஏன் அவசரகால கதியில் இந்த 'ஒப்பந்தம் எனும் 'வரி' வலையில் விழுந்தது? இதன் மூலம் இந்தியா பல முக்கிய சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது ஏன்?
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு 'பூஜ்ஜியம் வரி' (Zero Tariff) விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ஒரு முடிவாகும்.
டிஜிட்டல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தேசிய நலன்களையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்கும்படி உங்களை நெருக்கியது யார் அல்லது எது? சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) தொடர்பான விவகாரங்கள் ஏதேனும் இந்த அழுத்தத்திற்குக் காரணமா? இந்திய மக்கள் முன் உண்மையைச் சொல்லுங்கள்.
இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும், நம் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையிலான ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்குமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.















