அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆட...
`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?
மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது.
அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு விட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மடை மாற்றி பெண்களின் உரிமை தொகையாக கொடுத்திருக்கிறார்கள். இது தேர்தல் பயத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது.

தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும்" என்றார்.















