அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழ...
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறு கடந்த 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த பள்ளிகளை திறப்பதற்கு எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

திமுக அரசு அளித்த பிரமாண பத்திரம்
அதில், `ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக உள்ளது.
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இந்தி ஆங்கிலம் மற்றும் மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன, இதன் அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதிநவீன வசதிகளின் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற 1340 மாணவர்கள் கடந்த 2024-2025 கல்வியண்டில் மட்டும் அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
பல மாணவர்கள் முழுமையாக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இது தமிழ்நாட்டின் மேம்படுத்தப்பட்ட கல்வியின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது.
நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு அரசை பொருத்தவரைக்கும் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க உறுதிப்பூண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசினுடைய மாதிரி பள்ளிகள் செயல்பாட்டில் இருக்கும் போது புதிதாக அதன் நகல் போல் இருக்கும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தவிர்த்து விட்டு, மாநில சுயாட்சியை பாதுகாக்க தற்போதுள்ள உள்கட்டமைப்பு மூலம் தேசிய கல்வி நோக்கங்களை அடையவும் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிகளுக்கும் மத்திய அரசு நிதி உதவியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கனவே சமகிரக சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடிவிக்காமல் உள்ளது அது தொடர்பாகவும் மத்திய அரசிடம் எடுத்துரைத்திருக்கிறோம். எனவே தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய கல்வி நிதி 3548.22 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசு தனது பங்கு கல்வி நிதியை விடுவிக்காததால் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு பராமரிப்பு மாணவர்கள் நலத்திட்டங்கள் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே இதனை போக்கும் வகையில் மத்திய அரசு கல்வி நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும்.
எனவே கூடுதலாக நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அவ்வாறு நிறைவேற்றாமல் கூடுதலாக நிறுவனங்களை திறப்பது என்பது நிதி ரீதியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு ஏற்கனவே மாநிலத்திடம் உறுதியளித்த விஷயங்களை நிறைவேற்றி தர வேண்டும்," என தமிழ்நாடு அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் மட்டும் ஏன் நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறார்கள்?
இதற்கிடையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு புதிதாக அமைந்துள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா இந்த வழக்கை 12 வார காலம் ஒத்திவைக்க கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்திருப்பதாக கூறினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி நாகரத்தினா, `எதற்காக இந்த கடிதத்தை கொடுத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்திருக்கிறது. இந்த நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் புதிய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

மேலும் உடனடியாக பள்ளிகளை கட்டச் சொல்லவில்லை. பள்ளிகள் கட்டுவதற்கான இடங்களை கண்டறிய தான் சொல்லி இருக்கின்றோம். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறார்கள் என எங்களுக்கு புரியவில்லை. இந்த விவகாரத்தில் புதிய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்' என திட்டவட்டமாக கூறினர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, `தமிழகத்தில் 1500க்கும் அதிகமான சிபிஎஸ்சி பள்ளிகள் இயங்கி வருகிறது. ஆனாலும் இந்தி மொழியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை அமைக்க எதிர்ப்பு என்பது தெரிவிக்கப்படுகின்றது. இதில் உள்நோக்கம் இருக்கின்றது. இந்த பள்ளிகள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சமநிலை இல்லாத சூழல் ஏற்படுகின்றது" என கூறினார்.
இந்தியை யாரும் எதிர்க்கவில்லை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர் மகாதேவன், ``தமிழகத்தை பொறுத்தவரை இந்தியை யாரும் எதிர்க்கவில்லை. இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு வாதங்களை வையுங்கள்" என கூறினார்.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. எனவே வழக்கை பனிரெண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், `இரண்டு வாரங்கள் மட்டும் தான் கால அவகாசம் வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்
``இரண்டு வாரம் என்பது மிகவும் குறுகிய காலம் எனவே கூடுதல் கால அவகாசம் வேண்டும்" என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், ``மூன்றாவது மொழி என்பது தற்பொழுது பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிகளில் கூட ஒன்பதாம் வகுப்பில் மூன்றாவது மொழி என்பது கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.
அது நிச்சயம் ஏற்புடையது அல்ல. பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு அது கூடுதல் சுமையாக இருக்கும். மூன்றாவது மொழி என்பது தேவைதான். ஆனால் அதை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கூட மாணவர்கள் கற்கலாம்" என நீதிபதி நாகரத்னா கருத்து கூறினர்.
அப்போது பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ``இது இந்தி மொழி பற்றிய பிரச்சனை அல்ல. நவோதயா பள்ளிகள் அமைக்கலாமா வேண்டாமா என்பது தான் எனவே அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள கால அவகாசம் வேண்டும்" என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், `தமிழக அரசு கேட்பது போன்று 12 வார கால அவகாசம் என்பதை வழங்க முடியாது. மூன்று வார கால அவகாசம் மட்டும் தான் வழங்குகிறோம்.
இந்த விவகாரத்தில் புதிய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரமாண பத்திரத்தை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு" உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்த்த இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதுதான் எழுந்திருக்கும் உற்று நோக்கக் கூடிய கேள்வியாக மாறி உள்ளது.!



.webp)

















