கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவி...
`தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதியை தவெக இழந்துவிட்டது!’ - தவெகவை சாடும் அதிமுக
புதுச்சேரி அதிமுகவின் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களில் சிலர், தங்கள் சுயநலத்திற்காக தவெக தலைவர் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அது முற்றிலும் தவறான செயல்.
வெளிப்படையான ஆட்சியை அமைப்போம் என்று கூறிய த.வெ.க, ஆட்சிக்கு வந்தபிறகு குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு அமைச்சர் பதவி என்று மறைமுகமாகக் கூறி, அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் விதமாகத்தான் தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் இருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் தலைவர் யார்… செயலாளர் யார்… என்று முடிவெடுக்கும் உரிமை, கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் சட்டமன்றத்தின் நடத்தை விதி.
ஆனால் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டப்பேரவை விதிகளுக்குப் புறம்பாக கால தாமதப்படுத்தி சதித் திட்டம் தீட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் உடனே தலையிட வேண்டும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றால் அதற்கு கட்சித் தலைவரின் அனுமதி வேண்டும். அப்படித்தான் வழங்கவும் வேண்டும். ஆனால் தமிழகத்தில் அப்படி நடைபெறவில்லை.
இது நியாயமான அரசாக இருந்தால் த.வெ.க-வுக்கு ஆதரவு தரும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்தும் சபாநாயகர் அதை செய்யவில்லை.

த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக நீதிமன்றத்தை நாடுவோம். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் சபாநாயகரை அழைத்து கண்டிக்க வேண்டும்.
விஜய் தலைமையிலான இந்த அரசு, ஆட்சி செய்வதற்கான அனைத்து அருகதைகளையும் இழந்துவிட்டது. இந்த விவகாரத்தில் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஒப்புதலையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்" என்றார்.
















