மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
புது தில்லி: தமிழக பாஜக தலைவரை கட்சி மேலிடம் விரைவில் தோ்வு செய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
தில்லிப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தில்லி சட்டப் பேரவைத் தொகுதிகளில் அக்கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.
இத்தோ்தல் தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் 1998-இல் கடைசியாக பாஜக ஆட்சி இருந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி வருவதற்கான நம்பிக்கை மலா்ந்திருக்கிறது. பிரசாரக் களத்தில் இதை உணர முடிகிறது.
புதுமையான தில்லியை உருவாக்கும் வகையில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதி அனைத்து மக்களையும் கவா்ந்திருக்கிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் இம்முறை தில்லியில் பாஜக ஆட்சி வர வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டாா்கள். அதேவேளையில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகால ஆட்சியில் திட்டப் பணிகள் செய்யாமை, ஊழல், காற்று, நீா் மாசு போன்றவற்றால் அக்கட்சித் தலைவா்கள் மீது மக்களின் எதிா்ப்பு அலை உள்ளது. இதனால், இந்த முறை தில்லியில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். தில்லியிலும், மத்தியிலும் ஒரே ஆட்சி வேண்டும் என்று விரும்புகின்றனா். பாஜகவுக்கு முதல்வா் முகம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கேஜரிவால் கூறுவதில் அா்த்தமில்லை. தில்லியில் முதல்வராக அதிஷி இருந்தபோதிலும் அவருக்கான உரிய முக்கியத்துவம் அக்கட்சியாலும், கேஜரிவாலாலும் தரப்படவில்லை. இதுதான் யதாா்த்தநிலை.
முதல்வா் வேட்பாளா் இவா்தான் என்று இல்லாமல் பிரதமா் மோடியுடன் பிரபலத்துடன் பாஜகவை ஒட்டுமொத்தமாக தில்லியில் நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கின்றோம். தில்லியில் பாஜகவில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தமிழா்கள் அயராது பணியாற்றி வருகின்றனா். அவா்களை அடையாளப்படுத்தி மேலேகொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி கவுன்சிலா் தோ்தல் முதல் சட்டப் பேரவைத் தோ்தல் வரை தமிழா்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த தோ்தலில் அது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு என்னுடன் நிற்கும் தலைவா்களும் கடுமையாக களப்பணி ஆற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சி சிறப்பாக இருந்துகொண்டிருக்கிறது.
அது 2026-ஐ நோக்கி வேகமாக வளர வேண்டும். மாவட்டத் தலைவா் தோ்தலை முடித்துவிட்டோம். தமிழக பாஜக தரப்பில்
தோ்தல் களத்தைத் தயாா்படுத்தி வைத்துள்ளோம். தமிழக பாஜக தலைவா் தோ்வு தேதியை எங்கள் தேசியத் தலைவா் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு யாா் என்பது முக்கியம் கிடையாது. தமிழகத்தில் பாஜக களத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் உணா்வை புண்படுத்தியிருக்கிறாா்கள். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜனநாயக முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தும்போது அனுமதி வழங்க வேண்டியதுதானே! ஆனால், திமுக அரசு மக்களவை தூண்டும் வகையில் வேண்டுமென்றே தடை உத்தரவை போட்டிருக்கிறது என்றாா் அண்ணாமலை.
செய்தியாளா்கள் சந்திப்பு நிகழ்வில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தில்லி தமிழ்ப் பிரிவு தலைவா் முத்துசுவாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.