ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்க...
'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்த சபாநாயகர்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'புதிதாக 146 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பேரவையில் நடந்துகொள்ளும் முறை, அவையின் நடைமுறை என்ன, அவையில் என்ன பேசலாம் என்ன பேசக் கூடாது போன்ற பயிற்சிகள் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு ஏற்றம் தருகிற ஒரு நல்லரசு அமைந்திருக்கிறது. செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம் என தேர்தல் களத்தில் முதல்வர் விஜய் நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்.
இது விஜய் மாடல் அரசு. தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்துக் கொள்ள எல்லாரையும் அரவணைக்கும் கரமாக விஜய் இருப்பார்.
நான் பேசாமல் ஒரு அமைதிப் புரட்சியை செய்வேன் என்று முதல்வர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்துக்கு முன்னுதாரணமாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது இந்த தமிழ்நாடு சட்டமன்றம்தான்.

அவையின் மாண்பை போற்றி காப்பது அரசின் கடமை. எதிர்க்கட்சிக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. இந்த பயிற்சி முகாமுக்கு எல்லா எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.
1980 இல் என்னுடைய முதல் பேச்சை சட்டமன்றத்தில் பேசினேன். 'ஊரெல்லாம் அண்ணா சிலையை வைக்கிறோம். ஒரு சிலையை வைக்க 15000 ஆகும். அதற்கு பதிலாக ஒரு தீப்பெட்டி தொழிலை ஏழைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்' எனப் பேசிவிட்டேன். ஆனால், அதிமுகவிலிருந்து கொண்டு அண்ணா சிலை வைப்பதை பற்றி பேசியதால் அவையில் கொஞ்சம் அசௌக்ரியம் ஏற்பட்டது. ஆனால், என்னுடைய கன்னிப்பேச்சு என்பதால் யாரும் பதிலடி கொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் பேசும் போது, 'மாண்புமிகு உறுப்பினர் அண்ணா சிலையும் வைக்கலாம், தீப்பெட்டி தொழிலும் வைக்கலாம் என பேசியிருக்கலாம்.
ஆனால், அவரின் உன்னத நோக்கத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்' என்று பேசி சூழலை ஆசுவாசப்படுத்தினார். ஆக, ஒரு விஷயத்தை எப்படி என்ன வார்த்தைகளில் அவையில் பேச வேண்டும் என்பதும் முக்கியம்' என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறினார்.















