ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்க...
'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் வினாதாள் கசிவு காரணமாக நீட் மறுதேர்வு ஜூன்.21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப பதிவில், "இரண்டு அடுக்கு CRPF+CISF பாதுகாப்புடன் IAF விமானப் போக்குவரத்து.
AI கண்காணிப்புடன் கூடிய 4 அடுக்கு CCTV,
உள்ளே நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம், பல கட்ட சோதனைகள்,
பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பல நிலை மேற்பார்வை.
இவை ஏதோ உயர் மட்ட, ரகசிய ராணுவ மென்பொருளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல. 2026 ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்காக கல்வி அமைச்சகம் செய்துள்ள ஏற்பாடுகள் தான்.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள்.
ஆனால், நுழைவதற்கு முன் கடுமையான சோதனைகள், நீட்டிக்கப்பட்ட சோதனை நேரம் மற்றும் ஒட்டுமொத்த தேர்வு நேரத்தை 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது ஆகியவை மாணவர்களின் ஏற்கனவே அதிகரித்துள்ள தேர்வு மன அழுத்தத்தை மேலும் கூட்டவே செய்யும்.
வினாத்தாள் கசிவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பல மாதங்களாகத் தயாராகி வரும் இளம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவதற்கு முன்பு, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் சுமையை அரசு மறந்துவிட்டது.

இது நமது தேர்வு முறையின் நோக்கத்தையே சிதைப்பதுடன், "தேர்வு மன அழுத்தத்தைக்" குறைப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் இலக்கையும் பாழாக்குகிறது.
தேர்விற்காக இத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் இன்னமும் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனினும், தேசிய தேர்வு முகமை இந்தச் சிக்கல்களை விரைவில் சரிசெய்வதாக மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
இருப்பினும், நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வாக அமையாமல், ஒரு புதிய பிரச்சினைகளை உருவாக்குமோ என்ற கவலை எனக்குள் எழுகிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.















