Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை ...
`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்
மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள உத்தவ் தாக்கரே விரும்பினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் `நாங்கள் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்' என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இன்று மும்பையில் கூட்டணியை முறைப்படி அறிவித்தனர். முன்னதாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று தாதர் சிவாஜி பார்க்கில் இருக்கும் பால் தாக்கரே நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் ஒர்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது பேசிய ராஜ் தாக்கரே, ''மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் இணைந்து போட்டியிடும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்ந்த மராத்தியர் ஒருவர் மும்பை மேயராக வருவார்'' என்று தெரிவித்தார். அந்நேரம் அருகில் இருந்த உத்தவ் தாக்கரே, ``எப்படி இருந்தாலும் மும்பை நம்முடன் இருக்கும். `படேங்கே தோ கதேங்கே' என்ற முழக்கத்தின் படி எந்தவொரு பிளவும், ஒற்றுமையின்மையும் பேரழிவை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்தார்.
உடனே பேசிய ராஜ் தாக்கரே, ``மும்பை மராத்தி மக்கள் விரும்புவதை நாங்கள் செய்வோம்'' என்றார். ``பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் அதிருப்தியில் இருப்பவர்களும் எங்களுடன் சேரலாம்" என்றும், ``பா.ஜ.க-வில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க சகிக்காதவர்கள் எங்களது கூட்டணிக்கு வரலாம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மும்பை, நாசிக் போன்ற மாநகராட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்து இருப்பதாகவும், தொடர்ந்து ஒற்றுமையாக இருக்கவே இப்போது இணைந்து இருப்பதாகவும், மகாராஷ்டிரா தலைமை தாக்கரே குடும்பத்திற்கானது என்றும், தாக்கரேயால் மட்டுமே மகாராஷ்டிராவை வழிநடத்த முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இதில் பேசிய ஆதித்ய தாக்கரே, ''மும்பைக்கும், மகாராஷ்டிராவிற்கும் இன்று மிகவும் முக்கியமான நாள்'' என்று குறிப்பிட்டார். ஆனால் தோல்வி பயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.















