Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! ...
தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள் உற்சாக வாக்களிப்பு
மும்பை மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வயதானவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முன்னாள் ஆளுநர் ராம் நாயக் தனது 91வது வயதிலும் வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வந்து வாக்களித்தார். தாதர் பால்மோகன் வித்யா மந்திர் பள்ளியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிவசேனா வேட்பாளர் விசாகா ராவுத்திற்கு வாக்களித்தால் அது பதிவாகவில்லை.
இது குறித்து வாக்காளர்கள் புகார் செய்ததை தொடர்ந்து 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் அக்ஷய் குமார் போன்ற பாலிவுட் பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்தனர்.

நடிகை ஹேமாமாலினி வாக்களிக்க வந்தபோது அவர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு வந்தபோது வரிசையில் நின்ற வயதான வாக்காளர்கள் நடிகைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
அதனை ஹேமாமாலினியிடமே ஒருவர் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டார். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகராட்சியை சிவசேனாதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இம்முறை நடக்கும் தேர்தலில் அது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்களது தாக்கரே செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள முதல் முறையாக உத்தவ் தாக்கரே தனது உறவினர் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.
அனைத்தையும் இழந்த இரண்டு தாக்கரேக்களும் கூட்டணி வைத்துள்ளனர். பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் இம்முறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் துணைமுதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. மும்பையை இம்முறை தாக்கரே சகோதரர்கள் மற்றும் சிவசேனாவிடமிருந்து பறித்து விட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. தங்களுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவிற்கு பா.ஜ.க வெறும் 90 இடங்களை மட்டும் கொடுத்து இருக்கிறது. ஆனால் பா.ஜ.க 137 வார்டுகளில் போட்டியிடுகிறது.
இதனால் இத்தேர்தலில் நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்கள் மீண்டும் பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் 29 மாநகராட்சிகளில் 2,869 வார்டுகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மும்பை தவிர்த்து மற்ற மற்ற மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டிலும் 3 முதல் 5 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் வார்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அதாவது வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துள்ளனர். இது போன்ற ஒரு குழப்பமான தேர்தலை இதற்கு முன்பு தான் கண்டதில்லை என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களும் ஒரு வார்டில் 4 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தால் 4 வாக்குகளை செலுத்தினால் மட்டுமே வாக்குப்பதிவு செய்தது நிறைவடையும். இத்தேர்தலில் புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதோடு இத்தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளும் இணைந்துவிடும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அஜித்பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

















