நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!
திமுக திருச்சி மாநாடு: "பாஜக-வால் ஒருபோதும் தமிழ்நாட்டில் காவி அடிக்க முடியாது" - ஸ்டாலின் ஆவேசம்
திருச்சியில் உள்ள சிறுகனூரில் தி.மு.க சார்பில், 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. 700 ஏக்கரில், 200 ஏக்கர் மாநாட்டு திடலும், 240 அடி நீளத்தில் மேடை, 3.60 லட்சம் நாற்காலிகள், 4 லட்சம் பேர்களுக்கு உணவு, மாநாட்டு வருகை தந்த தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை என்று தடபுடல் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

48 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதோடு, 168 இடங்களில் எல்.இ.டி திரைகள், 1000 அடி நீளத்துக்குப் பிரமாண்டமான கோட்டை வடிவ மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டு, அதில் பெரியார், அண்ணாதுரை, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டன.
மாநாட்டு மேடைக்குப் பின்புறம் தி.மு.க ஐ.டி டீம் பரபரப்பாகச் செயல்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் லேப்டாப் சகிதம் வந்தனர்.
நொடிக்கொரு அப்டேட் என்ற வகையில் மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் ஹேஷ் டேக் செய்தனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 1,500 முகநூல் கணக்குகள் மூலம் இந்த மாநாட்டை நேரலை செய்து, 3 கோடி சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ரீச் செய்ய போவதாகத் தெரிவித்தார்.

காலை 11 மணியில் இருந்தே தொண்டர்கள் பசியாற வசதியாக நான்கு இடங்களில் சிக்கன் பிரியாணியும், சிக்கன் கிரேவியும் சுடச்சுட தயார் செய்து வழங்கப்பட்டது. அதோடு, மாநாட்டில் ஒவ்வொரு தொண்டருக்கும் 4 லிட்டர் தண்ணீர் வீதம் பத்து லட்சம் தொண்டர்களுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் ஒரு குடிநீர் தொட்டி, மோர், மூலிகை குடிநீர், தர்பூசணி என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் சிறுகனூர் பகுதிக்கு வந்தவர், மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்ட 110 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றிவிட்டு, அங்கிருந்து 600 அடி நீள ரேம்பில் நடந்து, குழுமியிருந்த கூட்டத்தினரைப் பார்த்தபடி மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார்.

த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சிகளில் நடப்பது போல் அவர் வாகனத்தில் வந்தபோதும், ரேம்ப் வாக் நடந்தபோதும் தொண்டர்கள் அவர்மீது தி.மு.க வண்ணம் கொண்ட துண்டுகளை எறிந்தனர். மேடையில் நின்ற சில தி.மு.க புள்ளிகளும் தங்களது கைகளில் இருந்த துண்டுகளை தலைக்கு மேலே சுழற்றினர்.
வரவேற்புரை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு,
"டெல்டாவே உங்களுக்குச் சொந்தம். ஆணையயிடுங்கள். வென்று காட்டுகிறோம்" என்று பேசினார்.
6.50 மணிக்கு மைக்கைப் பிடித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

அதன்பிறகு, "தி.மு.க இதுவரை 12 மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. இதில் 1956, 1990, 1996, 2006, 2014, 2021, 2026 என 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அணிக்கும், அ.தி.மு.க அணிக்கும் இடையில் தான் ஸாரி, அ.தி.முக அணி என்று அழைத்தால் மோடியும், அமித்ஷாவும் கோபித்துக்கொள்வார்கள்.
தி.மு.க-வுக்கும், என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி. அதுவும், தமிழ்நாட்டு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில்தான் போட்டி. பா.ஜ.க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் காவி அடிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாட்ஷா பலிக்காது. தமிழ்நாடு உங்களுக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். மீண்டும் வெல்வோம்.
மீண்டும் மீண்டும் வெல்வோம். கனிமொழி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகள் தயாராகி வருகின்றன. விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
அதேபோல், த.வெ.க பற்றியோ, விஜய்யைப் பற்றியோ எதுவும் விமர்சித்து பேசவில்லை. மாறாக, பா.ஜ.க-வைத்தான் தனது அரைமணிநேர பேச்சில் அதிகம் 'அட்டாக்' செய்தார்.

அதேபோல், "அண்ணாதுரை, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு என்னைத்தான் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தீர்கள். மறுபடியும் என்னைத்தான் ஜெயிக்க வைப்பீர்கள்" என்று எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாகப் போட்டுத் தாக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நம் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைப்பது போல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் உழையுங்கள். தேர்தலுக்கான கூட்டணி இல்லை. கொள்கைக்கான கூட்டணி. பீகாரில் நிதிஷ் குமார் முகத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அவரை அகற்றி விட்டு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க உள்ளது பா.ஜ.க.
இதே போல எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியாது. தி.மு.க இருக்கும் வரை அது நடக்காது.

தி.மு.க அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன.
அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர். ஏனென்றால், அந்தத் திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை அறிந்தும், அதற்காகக் கூட பட்ஜெட்டில் மாநிலத்திற்கு எந்தத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இந்த அளவுக்குத் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.












