கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன...
"திமுக தீய சக்தி மட்டுமல்ல, மக்களிடமிருந்து தூரம் போன தூர சக்தி" - முதல்வர் விஜய்
த.வெ.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ச்சியாக, வயர்லெஸ் ரோடு, கே.கே நகர், மன்னார்புரம், டி.வி.எஸ் டோல்கேட், சஞ்சீவி நகர், சிந்தாமணி வழியாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும் புனித வளனார் கல்லூரி மைதானத்திற்கு வருகை தந்தார்.
இந்தக் கூட்டத்தில் QR Code உள்ள ஐயாயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதில் பேசிய ஜோசப் விஜய், "தமிழ்நாட்டிற்கு திருச்சி இதயம் போல் என இதயத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி மிகவும் நெருக்கமானது. ஆறு மாசம் அமைதியாக இருப்போம் எனக் கூறியவர்களால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரவு தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதிராக பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் நல்லது செய்து கொண்டே இருப்பேன். அதிகாரம் செய்பவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் கோட் சூட் போட வேண்டுமா? நாமும் போடுவோம்.
எல்லாவற்றும் விளக்கம் கூற விரும்பவில்லை. அரசியல் ரீதியாக தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் தான் போட்டியே. இதற்கு நடுவில் யாருக்கும் எந்த வேலையும் கிடையாது.
தி.மு.க-வும் மற்றும் பலரும் சேர்ந்து விஜய் ஆட்சி அமைக்க கூடாது எனப் பல கூத்துக்களைச் செய்தனர். தி.மு.க நம்மை எதிர்க்க எதிர்க்க அத்தனையும் நமக்கு நன்மையே. சட்ட சபையில் என்ன நடக்கிறது என்பதை நாம் ஆட்சிக்கு வந்த பின் இளைஞர்கள், இளம்பெண்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
அரசியல் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வது நல்ல விஷயம் தான். தற்குறி என யாரைக் கூறினீர்களோ, அவர்கள்தான் உங்கள் அரசியலைக் கேள்விக்குறியாக்கி உள்ளார்கள். அண்ணா தொடங்கிய கட்சியை அடிமை கூடாராமாக்கி விட்டு இன்று உண்மை சொல் உடன் பிறப்பே என்கிறார்கள்.
தி.மு.க இந்த நிலைக்குக் காரணம் உங்கள் குடும்பம்தான் தி.மு.க தொண்டர்களே தெரிவித்து வருகிறார்கள்.

நாம் ஆட்சிக்கு வருபவர்களுக்கு முன் பல சதிகள் செய்தார்கள். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு மக்கள் மனதை வெல்லுங்கள். மக்களுக்குத் தொந்தரவாக உள்ள டாஸ்மாக்கை நான் மூடினேன். ஒரு மாத காலத்தில் விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அதன் அடிப்படையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதை விமர்சனம் செய்கிறார்கள். நீங்கள் நிதிக்கான அனைத்து கதவைகளையும் அடைத்து வைத்து விட்டீர்கள். அதை முதலில் சரி செய்ய வேண்டும். அது சரியில்லை, இது சரியில்லை என்கிறார்கள்.
ஆனால், மாடல் அரசில் போதைப் பொருள் கலாசாரம் பெருகி உள்ளது. அதுதான் பல பிரச்னைகளுக்குக் காரணம். மக்கள் பாதுகாப்பிற்காகத் தகுதியான அதிகாரிகள், காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.
என்ன பலி சுமத்தினாலும் மக்களுக்காக இருப்போம். தீய சக்தியும், தீந்து போன சக்தியும் பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள். தி.மு.க தீய சக்தி மட்டுமல்ல மக்களிடமிருந்து தூரம் போன தூர சக்தி.

தீர்ந்து போன சக்தியோடு ஆட்சி அமைக்க நினைத்த போதே தி.மு.க தூர்ந்து போன சக்தியாகி விட்டது. ஜாதி, மதம், வாக்குக்கு பணம் என்பதை இந்தத் தேர்தலில் உடைத்துள்ளோம். ஸ்டாலின் போல் எந்த ஊசலாட்டமும் எனக்கு இல்லை.
மதச்சார்பற்ற தன்மையில் சமரசம் இல்லை, மாநில உரிமை, நதி நீர் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரைத்தான் நிற்க வைப்போம். அவர்களுக்கு வெற்றி தாருங்கள். ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சி ஒரே நாளில் நடக்காது. ஆனால் நிச்சயம் அதை செய்வேன்" என்றார்.

















