கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்க...
`உள்ளே நடந்தது ஒன்று; சொன்னது வேறு' நெதன்யாகு மீது கோபத்தில் ட்ரம்ப் - போன்காலில் வெடித்த பிரச்னை?
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
ட்ரம்ப் ஈரான் போரை முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், நெதன்யாகுவோ அதற்கு முட்டுக்கட்டை போடுவதுப் போல, லெபனான் மீது தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்.
அதனால், இந்த நேரத்தில் இருவரும் தொலைபேசியில் பேசியிருப்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இந்தப் போன்கால் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"நான் இன்று பிபி நெதன்யாகுவிடம் பேசினேன். லெபனானின் பெய்ரூட் நகருக்குள் பெரிய அளவில் ராணுவத் தாக்குதல் எதையும் நடத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
அவரும் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். நன்றி பிபி! அதேபோல், ஹிஸ்புல்லா தலைவர்களின் பிரதிநிதிகளுடனும் நான் பேசினேன்.
இஸ்ரேல் மீதும், அதன் ராணுவ வீரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதற்குப் பதிலாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த இஸ்ரேலும் சம்மதித்துள்ளது. இது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்று பார்ப்போம் - இது என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!"
இந்தப் பதிவிற்கு சற்று முரணாக நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது...
"இன்று இரவு நான் அதிபர் டிரம்ப்புடன் பேசினேன். ஹிஸ்புல்லா அமைப்பு நமது நகரங்கள் மற்றும் குடிமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளைத் தாக்கும் என்று அவரிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.
எங்களுடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இதனால், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) திட்டமிட்டபடி தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்."

ட்ரம்ப், நெதன்யாகு வெவ்வேறு விதமாகப் பதிவிட, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, நெதன்யாகுவிடம் மிகக் கோபமாக ட்ரம்ப் போன்காலில் பேசியுள்ளார்.
மேலும் ட்ரம்ப் நெதன்யாகுவிடம், "உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.
நான் தான் உங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறேன். உங்களை அனைவரும் இப்போது வெறுக்கிறார்கள். இதனால், உலகத்தில் இருக்கும் அனைவரும் இஸ்ரேலை வெறுக்க தொடங்கிவிட்டார்கள்" என்று கோபமாகப் பேசினார் என்று சில ஆங்கில ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
















