கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்க...
நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தாமதமாகும் பருவமழை
நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டிய பருவ மழை கேரளாவில் இன்னும் தொடங்கவில்லை. அதேசமயம் தொடர்ந்து நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெப்பத்தின் அளவு உச்சநிலையைக் கண்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் சில பகுதிகளில் அதிக பட்சமாக 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

இந்த ஆண்டு பகல் மட்டுமல்லாமல் இரவிலும் மக்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் தேவை அதிகரித்து அடிக்கடி இரவு நேரங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.
கடுமையான வெயில் காரணமாக பகல் நேரங்களில் மாரடைப்பு, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் வெயில் தொடர்பான பிரச்னையில் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தவிர அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத் போன்ற நகரங்களில் ஒரே நாளில் தலா 250 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழையும் தாமதம் அடைந்து வருவதால் மக்கள் காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.





















