இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் ...
''மெல்ல மெல்ல அழியும் எவரெஸ்ட் சிகரம்!'' - 6 முறை ஏறிய வீராங்கனை சொன்ன அதிர்ச்சி தகவல்
பனி மூடிய இமயமலையின் சிகரங்களை ரசிப்பதும், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைப்பதும் பல மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் அந்தப் பனிமலைகளின் பின்னால் இன்று ஒரு மிகப்பெரிய சோகம் மறைந்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை ஆறு முறை ஏறி உலக சாதனை படைத்த நேபாளத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் மலையேற்ற வீராங்கனையான பூர்ணிமா ஸ்ரேஸ்தா, தற்போது எவரெஸ்ட் மலைப்பகுதி சந்தித்து வரும் ஆபத்துக்களைக் குறித்து உலகிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த வருடம் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய தனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பூர்ணிமா, எவரெஸ்ட் சிகரம் மிகவும் பலவீனமாகவும், ஆபத்தானதாகவும் மாறி வருவதாகக் கூறியுள்ளார். வெப்பமயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதால், மலையேறும் பாதைகள் அனைத்தும் சரிந்து விழும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"நாம் இயற்கையை எந்தளவுக்குப் பாழாக்குகிறோம் என்பதைப் பார்க்கும்போது, உலகம் எப்போதுதான் இதைக் கேட்கப் போகிறது?" என்று அவர் வேதனையோடு கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது பனிப்பாறைகள் மிகவும் வலுவாக இருக்கும். ஆனால் இந்த முறை மலையேறும் பாதையில் உள்ள பனிப்பாறைகள் உருகி, பாறைகள் தனியாகப் பிரிந்து விழுவதைத் தங்களால் பார்க்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மலையேறும் வீரர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதோடு, பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் மலையின் சுற்றுச்சூழல் மோசமடைந்திருப்பதை அவர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
I took this video while descending from the summit of Mt Everest (8,848.86 m) and approaching Everest Base Camp on 22 May 2026. Crossing the Khumbu Icefall has always meant navigating collapsing seracs, shifting ladders, and deep crevasses, but now another danger is rapidly… pic.twitter.com/m5ZKsM32Nc
— Poornima Shrestha (@poornimashresth) May 28, 2026
எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் விட்டுச் செல்லும் கழிவுகளும், மாறிவரும் உலக வெப்பநிலையும் இந்த அழகிய மலையை மெல்ல மெல்ல அழித்து வருகின்றன.
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் எவரெஸ்ட் சிகரம் சந்திக்கும் இந்த இக்கட்டான நிலையை உலகம் உணர்ந்து, உடனடியாக இயற்கை வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூர்ணிமா ஸ்ரேஸ்தா உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.




















