செய்திகள் :

திருச்சி: ``இருட்டில் சந்தை, திருட்டு ஆடுகளை விற்க ஏற்பாடு?'' - போராட்டத்தில் குதித்த விசிக-வினர்

post image

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம். அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை மதியம் 2 மணி  வரை நடைபெறும்.

இங்கு, திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், முசிறி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆடுகளை வளர்ப்பவர்களும், ஆடு வியாபாரிகளும் வந்து விற்பனை செய்வது வழக்கம்.

சமயபுரம் ஆட்டுச் சந்தை
சமயபுரம் ஆட்டுச் சந்தை

இந்நிலையில், தற்போது வார சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலரும் குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி ஆட்டுச் சந்தை அதிகாலை 2 மணிக்கு ஆடு விற்பனை இருட்டில் முடிந்து விடுவதாகவும், இதனால் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இதுபற்றி பேசிய ஆடு வளர்ப்பவர்கள் சிலர்,

"சீட்டு வசூல் என்ற பெயரில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் ஆட்டிற்கு ரூ. 80 என  வசூல் செய்யப்படுகிறது. அதே ஆட்டை வியாபாரிகள் வாங்கிகொண்டு வெளியே செல்பவர்களிடம் ரூ. 80 -ம் வசூல் செய்யப்படுகிறது.

மேலும், சந்தைக்கு ஆடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்வதோடு, இதற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதும் இல்லை. ஆனால், இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை.

முக்கியமாக, கழிப்பறை, மின் விளக்குகள், சாலை வசதி குடிநீர் வசதியும் இல்லை.

சமயபுரம் ஆட்டுச் சந்தை
protest

வழக்கமான நடைமுறையை மாற்றி முதல்நாள் இரவில் ஆடுகளை விற்பனை செய்ய காரணமே, திருட்டு ஆடுகளை கொண்டு வருபவர்கள் ஈஸியாக ஆடுகளை விற்க வேண்டும் என்று என்பதற்காகத்தான்.

அதற்காக, திருட்டு ஆடுகளை விற்பவர்கள் அவர்களை கவனிப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் சனிக்கிழமை காலையில் இருந்து ஆட்டுச் சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.

இந்நிலையில், ஆட்டுச் சந்தையில் நிலவும் அவலநிலை மற்றும் முறைகேடுகளை கண்டித்து சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சந்தையின் நுழைவாயிலில் வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என தெரிவித்துள்ளனர்.

 விசிக-வினர் போராட்டம்
விசிக-வினர் போராட்டம்

இது குறித்து சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம்,

"காலம் காலமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று மணி வரை நடைபெறும். ஆனால், தற்பொழுது ஏலம் எடுத்தவர்கள் நாங்களும் பல ஆலோசனைகளை வழங்கியும் இவ்வாறு செய்து வருகின்றனர்" என்று கூறுகின்றனர்.

 விசிக-வினர் போராட்டம்
protest விசிக-வினர் போராட்டம்

ஏலம் எடுத்தவர்களின் முறைகேடுகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் துணை போகிறார்களா என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தென்காசி வழக்கறிஞர் கொலை; குற்றவாளியை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்!

தென்காசி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் நடுபல்க் சிக்னல் அருகே ஊர்மேல் அழகியான் பகுதியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரின் சட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வைத்து நேற்... மேலும் பார்க்க