பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர் விஜய்! - முன்னாள் முதல்வர்கள் பின்பற்றிய மரபை உடைப்பது முறையா?
முதல்வர் விஜய் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் கூப்பிட கூப்பிட, எந்த பதிலும் சொல்லாமல் போன அந்த வீடியோ தான் இணையதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.
ஏன் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார் என்பதை விட இதற்கு முன்பாக இருந்த தமிழ்நாடு முதல்வர்கள் டெல்லியில் பத்திரிகைகளை எப்படி அணுகினார்கள் என்பதை பார்க்க வேண்டியதும் அவசியமானதாக உள்ளது.
காரணம் டெல்லியில் ஒலித்த அந்த குரலில் கூட, `ஜெயலலிதா அவர்கள் தொடங்கி அனைத்து முதல்வர்களும் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்கள், அந்த மரபை தயவு செய்து உடைக்காதீர்கள்' என்பதாகத்தான் இருந்தது?

ஜெயலலிதா
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டெல்லிக்கு பயணம் செய்தால், டெல்லி கிட்டத்தட்ட திருவிழா கோலம் பூண்டு விடும். டெல்லி சாணக்கியாபுரி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் வாழைத்தார் தொடங்கி கட்சி கொடி கம்பம் வரை என முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என கூட்டம் அலைமோதும். மங்கள இசை தொடங்கி செண்டை மேளம் வரை வைத்து முதல்வர் ஜெயலலிதா அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்படும்.

பிரதமரை சந்திக்கப் போகிறார் என்றால் முதல்வர் ஜெயலலிதா உட்காருவதற்கான நாற்காலி தனி வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வளவு படாடோபங்கள் இருந்தாலும் கூட பிரதமரை சந்தித்து விட்டு வந்ததற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து என்ன கோரிக்கை முன்வைக்கப்பட்டது? பிரதமர் என்ன சொன்னார் என்பதை அறிவித்துவிட்டு தான் தமிழ்நாடு திரும்புவார்
ஒ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முழுவதும் வித்தியாசமான பாணியை கடைப்பிடித்தார். டெல்லிக்கு வந்தால் பிரதமரை சந்திப்பது மட்டுமில்லாமல் பல்வேறு முக்கிய துறைகளை சார்ந்த அமைச்சர்களையும் சந்திப்பார்.
ஒவ்வொரு அமைச்சரையும் சந்தித்ததற்கு பிறகு அமைச்சகங்களின் வாசலிலேயே நின்று என்ன கோரிக்கை முன்வைக்கப்பட்டது? அதற்கு என்ன பதில் கிடைக்கப்பெற்றது என்பதை தெளிவாக விளக்குவார்.
ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம் என்பதை கூட டெல்லியில் வைத்து தான் பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்

எடப்பாடி பழனிசாமி
டெல்லி பயணத்தை ஒரு நிமிடம் கூட வீணடிக்க விரும்பாத முதல்வராக தான் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.
பிரதமரை சந்தித்ததற்கு பிறகு மற்ற துறை அமைச்சர்களையும் சந்திப்பார். கால அவகாசம் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து அடுத்த நாள் கூட சந்திப்பார். ஒரே முறையாக டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் புள்ளி விவரங்களுடனும் பதிலளிப்பார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அருகில் வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு தகவல்களை கொடுப்பார்.
மு.க ஸ்டாலின்
முதல்வராக மு.க ஸ்டாலின் டெல்லி வந்தார் என்றால் பிரதமர் சந்திப்பிற்கான நிகழ்ச்சிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற டி.ஆர் பாலு உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகளையும் பிரதமரை சந்திக்கும் பொழுது உடனடித்து செல்வார். அது நிர்வாக ரீதியில் இருக்கும் சிக்கல்களை எளிமையாக பிரதமரும் முதல்வரும் புரிந்து கொள்ள பயன்பட்டது.
மாநில அமைச்சர்களையும் அழைத்து வருவார். ஆனால் அவர்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களை சந்திக்க அனுப்பி வைத்து விடுவார். பிறகு ஒட்டுமொத்தமாக பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு விடையளிப்பார்.
அதேபோல பிற கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த நிர்வாகிகள் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்திற்கே வந்து முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினை சந்தித்து விட்டு செல்வார்கள்.

முதல்வர் விஜய்
ஆனால் முதல்வர் விஜய் முந்தைய முதல்வர்கள் பின்பற்றிய மரபுகளை முழுமையாக மாற்றி இருக்கிறார். முதல்வர் விஜய் தனது முதல் டெல்லி பயணத்தின் பொழுது துறை சார்ந்த அமைச்சர்கள் யாரையும் உடன் அழைத்து வரவில்லை. அதேபோல பிரதமர் உடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை ஊடகங்களை சந்தித்தும் கூறவில்லை.
வெறும் அச்சுட்டு அரசு கொடுத்த குறிப்பு மட்டும்தான் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முக்கியம்?
முதல்வர் விஜயின் பாணியையே பின்பற்றி முன்னாள் முதல்வர்களும் வெறும் அரசு குறிப்பை மட்டுமே கொடுத்து சென்று இருக்கலாம்.
ஆனால் தலைநகர் டெல்லியில் இருந்து கொண்டு முதல்வர்கள் தெரிவிக்கக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கையின் அடையாளமாக தான் பார்க்கப்படும்.
ஒரு மருத்துவர் நோயாளி ஒருவரை வெறுமென பார்த்துவிட்டு செல்வதற்கும், `நீங்கள் குணமாகி வருகிறீர்கள் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடுவீர்கள்' என்று வாய் திறந்து ஆறுதல் சொல்வதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது அல்லவா.
தமிழ்நாடு மக்களுக்கு இந்த இந்த தேவைகள் எல்லாம் இருக்கிறது, இது குறித்து நாட்டின் நிர்வாக தலைவராக இருக்கக்கூடிய பிரதமரை சந்தித்து டெல்லியில் வைத்து நான் வலியுறுத்தி இருக்கிறேன், இது எல்லாம் நிச்சயமாக தமிழ்நாடு கிடைக்கும், இதை நான் மக்களுக்கு உறுதியாக சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை அவர் பயன்படுத்தி இருந்தார் என்றால் அதனுடைய வீரியம் மிகப்பெரியதாக இருந்திருக்கும்.
அதுவும் இல்லாமல் அது வரலாற்று ரீதியிலான ஒரு ஆவணமாகவும் பாதுகாப்பாக மாறி இருக்கும்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து ஊடகங்களை முதல்வர் விஜய் புறக்கணிப்பது என்பது தமிழ்நாடு மக்கள் அவர் குரல் வழி கேட்க விரும்பும் செய்தியை அவர் தர மறுக்கிறார் என்பதுதான் என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!.





















