''சமரச தீர்வைக் காண விரும்புகிறேன்'' - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் கொடு...
`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் துணையான கெளரி ஸ்ப்ராட் என்பவரை கடந்த 5ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அமீர்கானின் முன்னாள் மனைவிகள் ரீனா தத் மற்றும் கிரண் ராவ் மற்றும் அவர்களது மகன்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் இருவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய ஆடைகளைத் அணிந்திருந்தனர். அமீர் கான் தந்த நிற தோத்தி-குர்தாவையும், கௌரி அதே நிறத்திலான லெஹங்காவையும் அணிந்திருந்தனர்.
அமீர் கான் தனது காதல் மனைவி கௌரி ஸ்ப்ராட்டிற்கு திருமணத்தில் பரிசளித்த ரூபி (மாணிக்க) திருமண மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிவீன்(QWEEN) என்ற ஆடம்பர நகை பிராண்ட் நிறுவனத்தால் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டது. இதன் நடுவில் மிக அரிய வகையான, இயற்கையான மடகாஸ்கர் மாணிக்க கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கல்லை மட்டும் தேடி எடுப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.
பத்து லட்சத்தில் ஒன்று என வர்ணிக்கும் அளவுக்கு இது மிகவும் அரியது. அந்த மாணிக்க மோதிரம் அதன் அரிய ரத்தினக் கல் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மோதிரத்தை வடிவமைத்த கிவீன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் குமார், இந்த மோதிரம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், ''இந்த குறிப்பிட்ட ரூபி (மாணிக்க) கல்லைத் தேடி எடுப்பதற்கு மட்டுமே மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இது மடகாஸ்கர் நாட்டு மாணிக்க கல் ஆகும். இது பத்து லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய மிக அரிய வகை கல்லாகும். இந்த திருமண மோதிரம், பார்ப்பதற்கு அப்படியே ஒரு அரச குடும்பத்து நகையைப் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
256 மணி நேர உழைப்பு
மோதிரத்தின் வடிவமைப்பு மேம்பாடு கல் பதித்தல் மற்றும் இறுதி மெருகூட்டல் என அனைத்து வேலைகளையும் சேர்த்து, இந்த மோதிரத்தை உருவாக்க 256 மணி நேரத்திற்கும் மேலான உழைப்பு தேவைப்பட்டுள்ளது. கிவீன் நிறுவனத்தின் 131 திறமையான கைவினைக் கலைஞர்களின் கூட்டு உழைப்பால் இந்த மோதிரம் முழுமையாக வடிவம் பெற்றுள்ளது.
வழக்கமான ரத்தின மோதிரங்களைப் போலல்லாமல், இந்த மோதிரத்தின் வடிவமைப்பு முற்றிலும் வித்தியாசமாகவும், அரச குடும்பத்து நகையைப் போன்ற கம்பீரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது''என்றார். சாதாரண மோதிரங்களில் கல் நேரடியாக ஒரு எளிய வளையத்தின் மீது பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த மோதிரத்தில் ரூபி கல் ஒரு நேர்த்தியான, தங்கத்தாலான கிரீட வடிவ அமைப்பிற்குள் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மடகாஸ்கர் ரூபி கல்லிற்கு பட்டை தீட்டப்பட்ட வடிவம் தரப்படவில்லை. அதற்குப் பதிலாக, மென்மையான மற்றும் குவிந்த வடிவத்தைக் கொடுக்கும் 'கேபோச்சான் கட்' (smooth and domed polish) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. ஆமீர் கான் கடந்த ஆண்டுதான் கெளரியை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண்டு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.




















