நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின...
`பழனிசாமி, மக்களை கேட்டுத்தான் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தாரா?' - டிடிவி தினகரன்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவுக்கு வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.

"கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தீர்களே?" என்ற கேள்விக்கு,
"31ஆம் தேதி வரை டிசம்பர் மாதம் உள்ளது, அதற்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது, கூட்டணி உறுதியான பின்பு அது குறித்து தெரிவிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்."
"அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பார் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே?" என்றதற்கு,
"துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2017 -இல் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்."
"உங்களிடம் ஓட்டுக் கேட்டவர், ராஜினாமா செய்யும்போது கேட்டாரா என எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் மக்களிடம் கேட்டுள்ளாரே?" என்ற கேள்விக்கு,
"2017 ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து, அவர் முதல்வராகக் காரணமான 18 எம்எல்ஏக்களையும் தொகுதி மக்களிடம் கேட்டுதான் தகுதி நீக்கம் செய்தாரா? அதேபோல் எம்ஜிஆர் கொண்டுவந்த சட்ட விதிகளையெல்லாம் தன்னை சுற்றி சில கைத்தடிகளை வைத்துக்கொண்டு தனக்கு சாதகமாக சட்ட விதிகளை மாற்றினார், அப்போது அதிமுக தொண்டர்கள் எல்லோரையும் கேட்டுத்தான் மாற்றினாரா?

இன்றைக்கு அதிமுக என்ற கட்சியை இல்லாமல் செய்து, இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில், பணத்திமிரில் பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி வருகிறார். அதிமுக என்ற கட்சியை, 'எடப்பாடி அதிமுக' என மாற்றி, ஒரு வட்டார கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். அங்கிருக்கக் கூடிய தொண்டர்கள் எல்லாம் தூங்குவது போல் நடித்தாலும் 2026 தேர்தலுக்குப் பின்னர் விழித்துக் கொள்வார்கள்."
"பாஜக, கூட்டணிக்கு அழைத்தார்களா?" என்ற கேள்விக்கு "இல்லை" என்றவரிடம்
" ஓபிஎஸ், வரும் 15 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து இருக்கிறாரே?" என்ற கேள்விக்கு
"15 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.










