திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் ச...
பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.
சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து ரூபி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்
இது போன்ற வழக்குகளில் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் நடமாட்டங்களை வைத்துப் போலீஸார் விசாரிப்பார்கள். போலீஸார் ரூபின் வீட்டிற்குச் சென்று விசாரித்தப்போது ரூபி மிகவும் பதட்டமாக இருந்தார். அதோடு தனது கணவரின் சகோதரரையும் உடனே வரவழைத்தார்.

ரூபியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அவர் மீது சந்தேகம் வலுவடைந்தது.
மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் சில தொழிலாளர்களுடன் அந்த வீட்டின் குளியலறையின் தரையில் புதிதாகப் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை மற்றும் பிளாஸ்டர் உடைத்து, அதற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கணவனின் உடலை மீட்டனர்.
உடலின் அழுகிய வாசனை வெளியில் வராமல் இருக்கவும், அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல் மறைக்கவும் கணவனைக் கொலை செய்த பிறகு குளியலறையில் புதைத்துள்ளார்.
இந்தக் கொலையில் மனைவியே முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், உடலைப் புதைப்பதற்கான ஆழமான குழியைத் தோண்டுவது, மண்ணை அகற்றுவது, சிமெண்ட் பூசுவது போன்ற வேலைகளை ஒருவரே தனியாகச் செய்வது கடினம் என்பதால், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று ஆக்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளைக் கண்டறிய அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தன் கணவர் காணாமல் போனதில் இருந்து தான் மிகவும் மனமுடைந்து சோகமாக இருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் காட்ட அந்தப் பெண் அவர்கள் முன்னிலையில் அழுது நாடகமாடி வந்தார். இருப்பினும், கணவர் சுரேந்திரா காணாமல் போன சூழ்நிலை குறித்து அவர் கூறிய விளக்கங்களில் பல முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் இருப்பதை சுரேந்திராவின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ரூபி சம்பவத்தன்று தனது இரண்டு மகள்களையும் தனது மைத்துனர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் கணவருக்கு தூக்க மாத்திரை கலந்த பாயசத்தைக் குடிக்க கொடுத்தார். அவர் உறங்கிய பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை குளியல் அறையில் புதைத்தார்'' என்று தெரிவித்தனர்.
ஆக்ராவில் நடந்த இந்தச் சம்பவம், பிப்ரவரி 2025-ல் நடந்த 'ப்ளூ டிரம்' (Blue Drum) கொலை வழக்கின் அதிர்ச்சியூட்டும் பின்னணியோடு பல ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அந்த வழக்கில், சௌரப் ராஜத்தை அவரது மனைவி முஸ்கான் ராஜ்புத்தும், அவளது காதலன் சாஹிலும் சேர்ந்து கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் வைத்து சிமெண்ட்டால் மூடி சீல் வைத்தனர்.
போலீஸார் கூற்றுப்படி, சுரேந்திரா வேலையில்லாமல் இருந்ததோடு, மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்தார். அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ரூபியைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
சுரேந்திராவுக்கு வேலை இல்லாததால், அந்தக் குடும்பத்தின் வீட்டுச் செலவுகளுக்கு சுரேந்திராவின் தாயார் பெற்று வந்த ஓய்வூதியத்தைத்தான் அவர்கள் முழுமையாக நம்பியிருந்ததனர்.
ரூபியிடம் போலீஸ் விசாரித்த போது, தான் நீண்ட காலமாகத் தனது கணவனால் தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளை அனுபவித்து வந்ததாக ரூபி தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போலத் தனது கணவர் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகவும், அந்தத் தாக்குதலுக்குப் பிறகே அவரைக் கொலை செய்ய தான் முடிவெடுத்ததாகவும் ரூபி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.















