மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? ய...
பினராயி விஜயன் வீட்டுக்கு முன் கார் உடைக்கப்பட்ட வழக்கு; அரசு வக்கீல் மீது அமலாக்கத்துறை அதிருப்தி
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி இடையே பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் 27-ம் தேதி கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள வீடு, பினராயி விஜயனின் மருமகனும் பேப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் கோழிக்கோடு கோட்டூளியில் உள்ள வீடு, சி.எம்.ஆர்.எல் மேலாண்மை இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் கொச்சியில் உள்ள வீடு, ஆலுவாவில் உள்ள சி.எம்.ஆர்.எல் அலுவலகம், பெங்களூருவில் உள்ள எக்ஸாலாஜிக் அலுவலகம் மற்றும் சசிதரன் கர்த்தாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு இடங்கள் உட்பட மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடந்தது.
திருவனந்தபுரம் பேக்கரி ஜங்சனில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் சோதனை முடிந்து திரும்பிய அதிகாரிகளின் வாகனக் கண்ணாடியை சி.பி.எம் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். அதிகாரிகள் பயணித்த கார்கள் மீது கற்களையும், செருப்புக்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி உத்தரவின்பேரில் மியூசியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். இன்னும் 20-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யவேண்டி உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள 9-வது நபரான ஆனையறா கல்லும்மூடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமாருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை அரசுத் தரப்பு வழக்கறிஞர் எடுத்ததே ஜாமீன் கிடைக்கக் காரணமானது என்ற விமர்சனம் எழுந்தது.
அரசு வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று நீதிமன்ற உத்தரவிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜாமீன் வழங்குவதை எதிர்த்து போலீஸ் அளித்த அறிக்கைக்கு முற்றிலும் மாறானதாக அரசு வழக்கறிஞரின் அணுகுமுறை இருந்தது.
இதனால், இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அரசுத் தரப்பு வழக்கறிஞரை இனி நம்ப முடியாது என்பதை உணர்ந்த அமலாக்கத்துறை, இந்த வழக்கில் தங்களையும் ஒரு நேரடித் தரப்பாக இணைத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் எட்டாவது நபரான வட்டியூர்க்காவு மஞ்சாடிமூடு பகுதியைச் சேர்ந்த ஷஃபீக் ஜாமீன் கேட்டு அளித்த மனுவை நீதிமன்றம் நேற்று பரிசீலித்தது. அந்தச் சமயத்தில்தான் அமலாக்கத்துறை மனு அளித்தது.
அமலாக்கத்துறையின் வழக்கறிஞரிடம், "நீங்கள் அரசுத் தரப்புக்கு உதவி செய்ய மட்டும்தானே செய்கிறீர்கள்?" என்று நீதிமன்றம் கேட்டது. அதற்கு, தங்களுக்குச் சுயமாக வாதாடுவதற்கும், ஜாமீன் மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரினார்.
அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி எஸ்.நசீரா ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 12-வது நபரான வர்க்கலா-வைச் சேர்ந்த லெனின் ராஜின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இது வரும் 29-ம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளது. இனிவரும் ஜாமீன் மனுக்களில் அமலாக்கத்துறையும் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும்.















