'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வந...
புதுச்சேரி: `அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?'- `பட்ஜெட்’ பொதுநல வழக்கால் சிக்கல்
புதுச்சேரியில் நடந்துமுடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்றார் ரங்கசாமி. அதையடுத்து தவணை முறையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் ஜி.என்.எஸ் ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
அதையடுத்து தங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை பதவியை ஒதுக்க வேண்டும் என்றும், அத்துடன் சபாநாயகர் பதவியும் வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க.
அதனால் அமைச்சர்கள் பதவியேற்று மூன்று மாதங்களைக் கடந்தும், அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதையடுத்து பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உள்துறையை பா.ஜ.க-வுக்கு கொடுக்க சம்மதித்தார் முதல்வர் ரங்கசாமி.

அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுத்தார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். இலாகாப் பட்டியல் முடிவுக்கு வந்ததும், சபாநாயகர் பதவி வேண்டும் என்று மீண்டும் அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் பா.ஜ.கவை விட அதிக இடங்களில் வெற்றிபெற்ற தங்களிடம்தான் சபாநாயகர் பதவி இருக்க வேண்டும் என்று நினைக்கும் முதல்வர் ரங்கசாமி, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த உரசலால் தற்போது வரை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. சபாநாயகருக்கான தேர்தலை ஜூலை 2-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு, கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு கோப்பை அனுப்பியது சட்டப்பேரவைச் செயலகம்.
ஆனால் சபாநாயகர் பதவியை பா.ஜ.க-வுக்கு தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில், இரண்டு மாதங்களாக அந்தக் கோப்பு ஆளுநர் மாளிகையின் பரிசீலனையில் (!?)இருக்கிறது.
இந்த நிலையில்தான் நாளை மறுதினம் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, `சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, அவருக்குரிய அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கு இருக்கிறது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துணை சபாநாயகர் அன்பழகன்.
அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகன், உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏ. இதற்கிடையில், ``என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று மாதங்களைக் கடந்தும் இன்னும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
அப்படி இருக்கும்போது தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தாமல், பட்ஜெட் கூட்டம் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

அதனால் அந்தத் தேர்தலை நடத்துவதைத் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும் சட்டசபையைக் கூட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணி. அந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு வந்தது.
அப்போது, அந்த மனுவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் சட்டசபைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாகவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.















