``சினிமாவில் ஹீரோ; அரசியலில் வில்லன் ஆக்ட்..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும்...
புதுச்சேரி பட்ஜெட்: `21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்!’ - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். மாலை 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2026-27ம் ஆண்டுக்கான வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவரது பட்ஜெட் உரையில், ``புதுச்சேரி அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.14,300 கோடி. அதில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,890 கோடி. மத்திய அரசின் நிதி ரூ.3,517 கோடியாக உள்ளது. மற்றவை நிகரக் கடன் வரம்பில் இருக்கிறது.
பட்ஜெட் தொகையில் ரூ.12,115 கோடி வருவாய் செலவினங்களுக்கும், ரூ.2,185 கோடி மூலதன செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.1,676.89 கோடியும், இளைஞர் சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.647.84 கோடியும், பசுமை சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.745.31 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்புக்கூறுத் திட்ட நிதியாக ரூ.642.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் புதுமைப்பெண் மின்சார வாகனத் திட்டத்தில் 250 பேட்டரி இருசக்கர வாகனங்களும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மின்சார ஆட்டோ திட்டத்தின் கீழ் 50 பேட்டரி ஆட்டோ வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. வன்கொடுமையால் இறக்கும் எஸ்.சி, எஸ்.டி குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
காவிரி நீர் கிடைக்காமல் தவிக்கும் காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் உழவு நிதி உதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் நுாலகம் அறிமுகப்படுத்தப்படும். புதுச்சேரி ரேஷன்கடைகளில் அரிசி அளவை மாற்றி அமைத்து, கோதுமை மாவு, துவரம்பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பாக வழங்கப்படும். ரேஷன்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணைய், சர்க்கரை, அத்தியாவசிய பொருட்கள் அடக்க விலையிலும் விற்பனை செய்யப்படும்.
முதற்கட்டமாக 10 இடங்களில் அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும். பசுமைப் பரப்பை அதிகரிக்க 55 ஹெக்டேரில் மாங்குரோவ் காடுகள், 21 ஹெக்டேரில் புதிய காடுகள் உருவாக்கப்படும். கடலோரத்தில் 2 லட்சம் பனை விதைகள் நடப்படும். இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு லேசர் முறையில் சிறுநீரகக் கற்களை நீக்கும் கருவிகள் வழங்கப்படும். மேலும் கண் சிகிச்சைக்கு 50 படுக்கை கொண்ட புதிய கண் மருத்துவமனை கட்டப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து வசதி செய்யப்படும். முதல்வர் உள்ளாட்சி வளர்ச்சிப்பாதை திட்டத்தின் கீழ் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் 2,282 பணிகள் ரூ.1,131 கோடியில் செயல்படுத்த ஐந்தாண்டு திட்டம் முதல்முறையாக வகுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள், செல்லப் பிராணிகள் கண்காட்சி நடத்தப்படும். முட்டை, இறைச்சி உற்பத்தியைப் பெருக்க 48,000 நாட்டுக் கோழிகள், முட்டையிடும் கோழிகள், 25,000 வான்கோழிகள் வழங்கப்படும். பாண்லே நிறுவனத்தில் 2 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து, பேக்கிங் செய்யும் தானியங்கி பால் பண்ணை அமைக்கப்படும். பால் விலை ஊக்கத்தொகை உட்பட ரூ.41 வரை தரத்துக்கு ஏற்ப வழங்கப்படும்.
மின் ஆற்றலை சேமித்து பயன்படுத்த ரூ.150 கோடியில் 50 மெகாவாட் திறன் கொண்ட மின்கல சேமிப்பு அமைக்கப்படும். தெலங்கானா மின் உற்பத்தி நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். புதிதாக ஆயிரம் மீனவ முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து கடல் ஆமைகள் பாதுகாக்கப்படும். ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். புதுவை தட்டாஞ்சாவடியில் 21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது. 150 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித் தொகையுடன் 12 மாதங்களுக்கு டிஜிட்டல் பயிற்சி பணிவாய்ப்பு வழங்கப்படும். தொழிலாளர் துறை சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படும். காரைக்கால் பிராந்தியத்தில் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நுாலகம் கல்வி மையமாக மாற்றப்படும். பாகூரில் ரூ.9.10 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படும். கதிர்காமம் அரசு கலைக் கல்லுாரியில் ரூ.16.91 கோடியில் கட்டடம், காரைக்கால் அவ்வையார் கல்லுாரியில் ரூ.10 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். காரைக்கால் கோட்டுச்சேரியில் ரூ.10 கோடியில் அதி நவீன கால்நடை மருத்துவமனை கட்டப்படும்” என்றார்.













