பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | T...
புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டிட்டன. ஆரம்பத்தில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டன.
இந்த இரண்டு மாநகராட்சிகளும் 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தது. எனவே அஜித்பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் தனது பெரியப்பா சரத்ப வார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க யாருமே எதிர்பாராத விதமாக இரண்டு மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கிறது. புனே மாநகராட்சியில் பா.ஜ.க 80 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது.

அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு பிறகு மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியை கடந்த 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கேயும் பா.ஜ.க 77 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது.
ஆனால் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தல் மூலம் பவார் குடும்பம் முதல் முறையாக புனேயை இழந்துள்ளது. புனேயில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மேயர் பிரசாந்த் ஜக்தாப் 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பிரசாந்த் தாயார் ரத்னபிரபா இத்தேர்தலில் தோல்வியை தழுவினார்.
மும்பையில் முதல் முறையாக ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது.
தாதா மகள்கள் தோல்வி
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் யோகிதா காவ்லி இத்தேர்தலில் மும்பையில் தோல்வியை தழுவினார். அருண் காவ்லியின் மற்றொரு மகளான கீதா காவ்லி 212வது வார்டில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

இரண்டு பேரும் அருண் காவ்லி தொடங்கிய அகில பாரதீய சேனா என்ற கட்சி சார்பாக போட்டியிட்டனர். இதே போன்று சிவசேனா(ஷிண்டே) எம்.பி. ரவீந்திர வாய்க்கர் மகள் தீப்தி வாய்கர் மும்பை 73வது வார்டில் தோல்வியை தழுவினார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயின் மைத்துணி வைசாலி சாவ்லே தாராவி 183வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் வைசாலியை காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலி என்பவர் 1450 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மும்பையில் 1.03 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1,700 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















