ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் -...
'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படியிருக்க அவர் எப்படி அதிமுகவில் இணைந்தார்?

காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்த சமயத்திலேயே விஜய் தரப்பு அவரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. இதுசம்பந்தமாக மேலும் தகவல்களை கூறும் விவரமறிந்தவர்கள், 'கடந்த டிசம்பர் மாதமே காளியம்மாளை விஜய் தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்துப் பேசியிருந்தார்.
தனிப்பட்ட முறையில் ஒன் டு ஒன்னாக அந்த சந்திப்பு நடந்திருந்தது. அப்போது காளியம்மாள் தவெக சம்பந்தமாக நிறைய சந்தேகங்களை விஜய்யிடமே கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டார். விஜய்யும் தன்னுடைய கட்சிக்கான பெண் முகமாக காளியம்மாள் இருப்பார் என நம்பினார். இருவருக்கும் அந்த சந்திப்பு நிறைவானதாக அமைந்தது. ஆனால், விஜய்யின் வியூக வகுப்புப் புள்ளியான ஜான் ஆரோக்கியசாமிக்கு ஆரம்பத்திலிருந்ததே காளியம்மாளை கட்சிக்குள் சேர்ப்பதில் விருப்பமில்லை.

காளியம்மாள் விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தத் தகவலை அவர் சீமான் தரப்புக்கு பகிர்ந்திருக்கிறார் என்கிறார்கள். அத்தோடு காளியம்மாளை நேர்காணல் செய்வதைப் போல, 'ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கும் போதே இன்னொரு கட்சியில் வந்து பேசுகிறீர்கள். இங்கிருந்து கொண்டு வேறொரு கட்சிக்கு செல்லமாட்டீர்கள் என என்ன நிச்சயம்?' என பேச்சுவார்த்தையை உடைத்து விடுவதைப் போல கேட்டிருக்கிறார். அதிலேயே காளியம்மாள் அப்செட். ஆனாலும் விஜய் எப்படியும் அழைப்பார்.
நல்ல பொறுப்பை கொடுப்பார் என காளியம்மாள் காத்திருந்தார். விஜய்யும் சில சமயங்களில் 'அவங்க ஏன் இன்னும் வரல..' என காளியம்மாள் குறித்து அப்டேட்டும் கேட்டிருக்கிறார். சுற்றியிருக்கும் வியூக தரப்பு எதை எதையோ சொல்லி சமாளித்துவிட்டது என்கிறார்கள்.
இடையில் திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பு காளியம்மாளிடம் பேசிப் பார்த்தது. கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்தவுடன் சசிகலா தரப்பும் தீவிரமாக முயன்றிருக்கிறது. காளியம்மாள் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. இறுதியாகத்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் களத்தில் இறங்கி காளியம்மாள் மனதை மாற்றியிருக்கிறார்.

ஓராண்டாக காத்திருந்தும் விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால், ஓ.எஸ்.மணியனின் அழைப்பை ஏற்கும் மனநிலைக்கு காளியம்மாள் வந்திருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பெண்களின் வாக்குகளை மையப்படுத்தியதாக இருக்கப்போவதால், அதிமுகவின் பிரசாரத்துக்கு காளியம்மாள் வலுசேர்ப்பார் என எடப்பாடி நம்புகிறார்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
















