ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
பெண் மேயரைக் காலில் விழச்செய்த MLA! டு 'உனக்கு அறிவு இருக்கா?' ஜூனியரைத் திட்டிய சீனியர்! | கழுகார்
வெப்பம் தகிக்கும் 'கோட்டை' மாநகராட்சி நிர்வாகத்தில், ஏகத்துக்கும் அடாவடி செய்வதாக, லோக்கல் எம்.எல்.ஏ-வான 'தமிழ்க் கடவுள்' பெயர் கொண்டவர்மீது சர்ச்சைகள் இருக்கின்றன. அதில், அடுத்ததாக ஒரு சர்ச்சையும் சேர்ந்திருக்கிறது. மாநகராட்சியின் பெண் மேயர், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி எம்.எல்.ஏ-விடம் வாழ்த்துப் பெற சென்றிருக்கிறார். அப்போது, அவரைக் காலில் விழச்செய்து, அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருக்கிறார் எம்.எல்.ஏ.
அதைப் பார்த்து கடுப்பான மேயரின் ஆதரவாளர்கள், 'மாநகராட்சியின் முதல் குடிமகள் என்பவர் வணக்கத்துக்குரியவராயிற்றே... அவரைக் காலில் விழவைத்து, அதை போட்டோ எடுத்து வெளியிடுவது பெண் அடிமைத்தன மனோபாபவம் இல்லையா...' என்று கட்சித் தலைமைக்குப் புகார்களை அனுப்பி வருகிறார்களாம்!
சமீபத்தில், மதுரையில் நடந்த சௌராஷ்டிரா சமூக அரசியல் எழுச்சி மாநாட்டில், 'சட்டமன்றத் தேர்தலில் சரியான பிரதிநிதித்துவம் தரும் கட்சிக்கே தங்களுடைய ஆதரவு. எங்கள் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில், சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர். அவர்களுடைய கோரிக்கைக்கு முரணாக, தே.ஜ கூட்டணியில் உள்குத்து பட்டையைக் கிளப்புகிறதாம். அதாவது, 'மதுரை தெற்குத் தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் விரும்புகிறார்.
அவர், ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர் என்பதால், மதுரை தெற்குத் தொகுதியை பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட செல்லூர் ராஜூ திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க-வில், சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகி மகாலட்சுமி சீட் எதிர்பார்த்து வரும் நிலையில், தொகுதியைத் தனக்கு ஒதுக்க வேண்டுமென, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இராம.சீனிவாசன் கடுமையாக முட்டிமோதி வருகிறார். இப்படி, அ.தி.மு.க - பா.ஜ.க கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களால், சௌராஷ்டிரா சமூக வாக்குகள் சிதறிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தி.மு.க-வினர்தான் குஷியில் இருக்கிறார்கள்...' என்கின்றன தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரங்கள்!
கொங்கு மண்டலத்தில் பணியாற்றும் சீனியர் - ஜூனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கிடையே, கடும் ஈகோ மோதல் நிலவுகிறதாம். சீனியருடைய பேச்சைத் துளியும் கேட்பதில்லையாம் ஜூனியர். அதில் கடுப்பான சீனியர், சக காவல்துறை அதிகாரிகளின் முன்பாக வைத்து, 'உனக்கு அறிவு இருக்கா...' என்று ஜூனியரை வெளுத்துவிட்டுவிட்டாராம்.
அதில் அப்செட்டான ஜூனியர் அதிகாரி, அலுவலகப் பணியைத் தாண்டி ஒரு வார்த்தைக்கூட சீனியருடன் பேசிக்கொள்வதில்லையாம். விவகாரம், தலைநகரிலுள்ள 'பவர் சென்டர்' அதிகாரியிடம் பஞ்சாயத்துக்கு வரவும், 'நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்தான். நீங்க கேட்ட இடத்துல போஸ்டிங் போட்டுக் கொடுத்தேன். அப்படியிருந்தும் ஏன் அடிச்சுக்கறீங்க. ஒத்துமையாக வேலையைப் பாருங்க...' என்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம்.
'காவல்துறைக்குள் ஈகோ மோதல் ஏற்படுவது சகஜமானதுதான். ஆனால், பொதுவெளியில் வைத்துத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. சீனியரிடம் காட்ட முடியாத கோபத்தை, தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் ஜூனியர். இந்த மோதல் எங்கே போய் முடியப்போகிறதோ..?' என்று நொந்துகொள்கிறார்கள் கொங்கு மண்டலக் காக்கிகள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் காரைக்குடியில் களமிறங்கி வேலையை ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், உள்ளூரில் கோஷ்டி பூசல் களைக்கட்டுவதால் தடுமாறிப் போயிருக்கிறார்களாம் தம்பிகள். 'மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் இரண்டு பிரமுகர்களுக்கு இடையே, நீயா... நானா.. கோஷ்டி மோதல் உச்சமடைந்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுகளை, லோக்கலிலுள்ள கட்சி நிர்வாகிகள்தான் வழக்கமாக நடத்துவார்கள். ஆனால், காரைக்குடியிலுள்ள இரண்டு பிரமுகர்களும் எதிரும் புதிருமாக இருப்பதால், வேறு வழியில்லாமல் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்தப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவராமல், எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப்போவதில்லை. இந்தப் பிரச்னையின் தீவிரத்தை சீமான் புரிந்துகொண்டால்தான், வெற்றியடைய முடியும்' என்கிறார்கள் நா.த.க சீனியர்களே!
தமிழகக் காவல்துறையில், பதவி உயர்வுடன் கூடிய அதிகாரிகள் இடமாறுதல் சமீபத்தில் வெளியானது. அதில், காலியாகவுள்ள திருச்சி டி.ஐ.ஜி பதவியை மட்டும் நிரப்பவில்லை. 15 எஸ்.பி-க்கள் டி.ஐ.ஜியாகப் பதவி உயர்வு பெற்ற பிறகும்கூட, திருச்சி டி.ஐ.ஜி போஸ்டிங்கை காலியாகவே வைத்திருக்கிறார்கள். விசாரித்தால், 'உளவுத்துறையில் பணிபுரியும் 'சூரிய' அதிகாரிக்காக அந்தப் பணியிடம் காத்திருக்கிறது' என்கிறார்கள் காக்கிகள். அதேபோல, மான்செஸ்டர் மாவட்டத்திலும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. அம்மாவட்டத்தில் உயரதிகாரியாக இருந்த 'தமிழ் கடவுள்' பெயர்கொண்டவர், ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். 'தூக்கியடிக்கப்படுவார்' என்று கொங்கு காக்கிகள் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் அதே மண்டலத்தில் உயர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர் காப்பாற்றப்பட்டதற்கு, உளவுத்துறை உயரதிகாரியுடன் இருக்கும் நெருக்கம்தான் காரணமாம்!
















