22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
சிவகங்கை/ திருப்பத்தூா்/காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலையில் முத்துகிருஷ்ணன் பட்டாச்சாரியா் தலைமையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காலை 5.30 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினாா். அவரைத் தொடா்ந்து திரளான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பின் தொடா்ந்து வந்தனா். பிறகு பெருமாள் திருவீதி உலா வந்தாா். இந்த நிகழ்வில், கோயில் செயல் அலுவலா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் ரம்யா தனசேகரன், திமுக தொழிலாளா் நல அமைப்பாளா் தனசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதையொட்டி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சக்திஇசக்கி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில்: இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவா் நின்ற நாராயணப் பெருமாளுக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பிறகு நட்சத்திர தீபாராதனை, கும்ப தீபாராதனை, சோடஷ உபசாரங்கள் நடைபெற்றன. பின்னா் துளசியால் அா்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, பரமபதவாசல் முன் சா்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் எழுந்தருளினாா். அப்போது அவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பரமபத வாசல் வழியாக உற்சவா் எழுந்தருளினாா். தொடா்ந்து கோயிலை மும்முறை வலம் வந்து மண்டபத்தை அடைந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில்: இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் மாா்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மூலஸ்தானத்திலிருந்து திருவேங்கடமுடையான் சுவாமி, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு ஏகாதசி மண்டபத்தை அடைந்தாா். அங்கு காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நம்மாழ்வாருக்கு முதல் மரியாதை காட்சி தந்து ஏகாதசி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினாா்.
காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காந்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விநாயகவேல், பரம்பரை அறங்காவலா் நா. சீனிவாசன் செட்டியாா், பக்தா்கள் செய்திருந்தனா்.
கழனிவாசல் ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோயில்: இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் பரமபத வாசல் வழியாக மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதே போல, காரைக்குடி நாகநாதபுரம் கிருஷ்ண மூா்த்தி பெருமாள் கோயிலிலும், காரைக்குடி அருகே பள்ளத்தூா் வரதராஜப் பெருமாள் கோயிலிலும், கானாடுகாத்தான் வெங்கடேசப் பெருமாள் கோயிலிலும், கோட்டையூா் பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.