ரஜினி - விஜய் குறித்த பேச்சு: `நான் பின் வாங்கப்போவதில்லை' - விளக்கம் அளித்த விஷ...
மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சமீபத்தில் சந்தித்து அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பிரதமரின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் முழுநேர கேபினட் அமைச்சராக சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்படலாம் என்றும், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சிவசேனாவுக்கு ( ஏக்நாத் ஷிண்டே) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படலாம். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் முழுநேர கேபினட் அமைச்சராக அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரம்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதி எம்.பி. அருண் கோவில் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ராகவ் சத்தா அல்லது அசோக் மித்தல் ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். தற்போதைய மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு நீக்கப்பட்டு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பரிந்துரைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பீகாரின் மகாராஜ்கஞ்ச் தொகுதி எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் விஷ்ணு தத் சர்மா ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்கிறார்கள்.
தற்போது மத்திய மின்சாரத் துறையை கவனித்து வரும் மனோஹர் லால் கட்டார் தனது துறையை இழக்கலாம் என்றும், மேலும் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் (MoS) பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அடுத்தடுத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எம்.பி-க்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
















