நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?
மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!
ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம்.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, "என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார்.

ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். "இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்" என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். "அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது" என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.






















