தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம...
முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவியை அனுப்பிய கோவை சமூக ஆர்வலர்; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் நிலையில், அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முதலமைச்சரை விஜய்யைக் கண்டித்து, கோவையில் சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செவித்திறன் கருவியை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
செவித்திறன் கருவியை கோவை தபால் நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைத்தார்.
இது குறித்து பேட்டியளித்த பெரியார் மணி, “தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் எதிராக சம்பவங்களும், பாலியல் குற்றங்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற விவகாரங்களில் உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினால், அவர் எதையும் காதில் வாங்காதது போலவே கடந்து செல்கிறார். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க எவ்வித கடுமையான உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே போன்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்தவர், தற்போது முதலமைச்சரான பிறகு வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சத்தமிட்டு கூப்பிட்டும், அவர் காது கேட்காதது போல நகர்ந்து செல்கிறார். எனவே, அவருக்கு ஏதேனும் காது கேட்கும் திறன் குறைபாடு இருக்குமோ என்ற எண்ணத்தில், தமிழக மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் அவருக்கு முதலமைச்சர் அலுவலக முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை பார்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
இந்தக் கருவியைப் பொருத்திய பிறகாவது, தமிழகத்தில் பாதிக்கப்படும் குழந்தைகளின் கதறல்களும், பெற்றோர்களின் கண்ணீர்க் குரல்களும் முதலமைச்சரின் காதுகளில் விழுந்து, அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.















