செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி!

post image

சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாகும்.

இந்தத் தலங்களின் வரிசையில் ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி மிகவும் முக்கியமானதலம். இங்கே அருளும் இறைவனின் திருநாமம் அருள்மிகு சோமநாதேஸ்வரர்.

மாமன்னன் மகேந்திரவர்மப் பல்லவன் இந்தக் கோயிலை எழுப்பினான் என்கிறார்கள். அவன் பெயராலேயே இந்த ஊர் அழைக்கப்பட்டது. இங்கே சிவாலயம் மட்டுமன்றி, மகாவிஷ்ணுவுக்கும் குடைவரைக் கோயில் எழுப்பியுள்ளார் மகேந்திரவர்மப் பல்லவன்.

மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்
மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்

மகேந்திரவாடியில் பெரியதொரு ஏரியை உண்டாக்கிய மன்னன், பாலாற்றில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டி, அந்த ஏரியுடன் இணைத்தானாம். இதற்கு மகேந்திர தடாகம் எனப் பெயரிட்டான். ஒருகாலத்தில், இந்தத் தலத்தில் பெரியதொரு கோட்டை இருந்ததாம். இப்போது கோட்டை இருந்த இடத்தில் சிறியதொரு பாறையும், அதன் மீது விநாயகர் கோயிலும் உள்ளன.

அற்புதமான இந்த ஊரின் நடுநாயகமாக, அருள்மிகு சோமநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கருங்கல் திருப்பணியால் அமைக்கப்பட்ட, சிறிய ஆலயம்; ஆனால், இறைவன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவனார் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள். இவர்களைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார் தட்சன். இந்தப் பெண்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டுமே அன்பு பாராட்டினான் சந்திரன். இதனால், ஏனைய மனைவிகள் வருத்தம் அடைந்தனர்; தட்சனிடம் சென்று முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனைச் சபித்தார்.

சாபத்தின் காரணமாக சந்திரனின் அழகு தொலைந்தது; ரோக நோயால் வாடினான். சாப விமோசனத்துக்கு சிவனாரைச் சரணடைவதே உத்தமம் எனப் புரிந்துகொண்டு, தவம் செய்து அவரைத் தரிசித்து வணங்கினான்.

மகேந்திரவாடி குடைவரை
மகேந்திரவாடி குடைவரை

சந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவனார், மூன்றாம் பிறையளவு இருந்த அவனைத் தன் தலையில் சூடிக் கொண்டார். இதனால் அவருக்கு சந்திரசேகரர் எனும் பெயர் அமைந்தது. அவரின் திருவருளால், இழந்த அழகை மீண்டும் பெற்றான் சந்திரன்.

சந்திரனுக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் தம்மை வந்து வழிபடும் அன்பர்களுக்கும் வரம்வாரி வழங்குகிறார் இந்த ஈசன். `அடியார்தம் குறைகளையெல்லாம் களைந்து அவர்களின் சஞ்சலத்தைப் போக்கி சந்தோஷ வாழ்வை வரமாகத் தரும் ஈசன் இவர்’ என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கள்கிழமை அன்று அதில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்!

ஆலயப் பிராகாரத்தில், ஆறுமுகனுக்கும் சந்நிதி உள்ளது. ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், தேவியருடன் காட்சி தருகிறார் இந்த ஆறுமுகப் பெருமான். சஷ்டி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திர தினம் ஆகிய நாள்களில் இவரை வழிபடுவது விசேஷம். லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

எப்படிச் செல்வது?: சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மகேந்திரவாடி. பாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து, சுமார் 7 கி.மீ. தொலைவு; காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள், மகேந்திரவாடி வழியாகச் செல்லும்.

ஏரிக்காத்த அம்மன்!

மகேந்திரவாடி மகேந்திர தடாகம் ஏரிக்கரையில் சப்தமாதர்களுக்காகவே ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு தெய்வங்களுடன் விநாயகப் பெருமானும் காட்சி தருகிறார்.

சப்தமாதர்களில், பைரவிதான் இங்கே பிரதான தெய்வம்! ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என ஊர்மக்கள் அழைக்கின்றனர்.

ஒருமுறை, ஏரியின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதாம். ஊர் மக்கள் சப்தமாதரை வழிபட்டனர். அப்போது, கரை உடைந்துவிடாமல் ஏரியையும், வெள்ளத்தைத் தடுத்து மக்களையும் காப்பாற்றியதால், இந்த அம்பிகையை ஏரி காத்த அம்மன், மதகு காத்த அம்மன் என்று வழிபட ஆரம்பித்தனராம். இந்தப் பெயர்களே ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என மருவியதாகச் சொல்கிறார்கள்!

சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!

சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.!

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.! மேலும் பார்க்க

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் ஆடி அமாவாசை; பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு | Photo Album

பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில... மேலும் பார்க்க

வேண்டுதலுக்காகக் கட்டிய மணிகளை விழுங்கும் அதிசய மரம்... கலியுக அற்புதம் சொரிமுத்து ஐயனார் கோயில்!

பிரார்த்தனை நிறைவேறினால் கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல தலங்களில் உள்ளது. அப்படிக் கட்டப்பட்ட மணிகளை ஒரு மரம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விழுங்கிவிடுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், திருநட்டாலம் சங்கரநாராயணர் : வழக்குகளில் வெற்றி... திருமண வரம் தரும் ஆலயம்!

ஈசன் சங்கரநாராயணராய் அருளும் தலங்கள் அனைத்துமே சிறப்புடையவை. தம்பதி ஒற்றுமையை அதிகப்படுத்துபவை. இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான நலன்களை அருள்வதோடு உலகுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்குவன. அப்படிப்பட்... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம் : பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர்... இல்லறம் இனிக்கும்!

திருவல்லிக்கேணி என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்தான். ஆனால் அத்தலத்தில் சிறப்பு மிக்க சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. வாருங்கள், அத்தலத்தின் சிறப்புகளை அறிந... மேலும் பார்க்க