சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா...
ரூ.250 ஊதியம்: AI ரோபோக்களுக்காக உழைப்பை விற்கும் இந்தியர்கள்! - எதிர்கால தேவையா அல்லது ஆபத்தா?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று மென்பொருள்களைத் தாண்டி, மனிதர்களைப் போல உடல்ரீதியாகச் செயல்படும் ரோபோக்களாக (Humanoid Robots) உருவெடுத்து வருகிறது. இந்த ரோபோக்களுக்கு மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று கற்றுக்கொடுப்பதற்காக, சாதாரண இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் தலையில் கேமராக்களைப் பொருத்திக்கொண்டு அன்றாட வேலைகளைச் செய்யும் புதிய நடைமுறைதான் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
இது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கினாலும், எதிர்காலத்தில் எளிய தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள்.
எதற்காக இந்த கேமரா பயிற்சி?
ChatGPT போன்ற மென்பொருள்களுக்கு இணையத்தில் உள்ள எழுத்துகள், தரவுகளைக் கொண்டு பயிற்சி அளித்துவிடலாம். ஆனால், வீடுகளிலோ தொழிற்சாலைகளிலோ வேலை செய்யும் ஒரு நிஜ ரோபோவிற்கு, மனிதர்கள் எப்படிப் பொருள்களைப் பிடிக்கிறார்கள், எப்படி அசைக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.
இதற்காக ‘Egocentric data’ எனப்படும் 'முதல் நபர் கோணத்திலான' வீடியோ தரவுகள் தேவைப்படுகின்றன. அதாவது, ஒரு மனிதர் தன் கண்களால் ஒரு வேலையை எப்படிப் பார்க்கிறாரோ, அதே கோணத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள். இதற்காகவே மனிதர்களின் தலையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் கிளாஸ்கள் அல்லது சென்சார் கேமராக்களைப் பொருத்தி, அவர்கள் வேலை செய்யும் விதம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு ரோபோக்களுக்குப் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இது எப்படி நடக்கிறது?
இந்தத் திட்டத்தில் சாதாரண இல்லத்தரசிகள் முதல் சாலையோரத் தொழிலாளர்கள் வரை பலரும் ஈடுபட்டுள்ளனர். வீடியோ எடுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒருவர் மாம்பழம் நறுக்குவது, சமையல் செய்வது போன்ற அன்றாட வீட்டு வேலைகளைத் தன் தலையில் ஸ்மார்ட்போனைப் பொருத்திக்கொண்டு பதிவு செய்கிறார். அவர் இந்த வீடியோக்களை பிரத்யேக செயலி வழியாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி AI நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.
பெங்களூருவில் கடந்த பத்து ஆண்டுகளாகச் சாலையோரம் பூக்கட்டி விற்கும் 55 வயது பெண்மணி ஒருவரும், தன் நெற்றியில் கேமராவைப் பொருத்திக்கொண்டு பூக்கட்டும் வீடியோவைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் இது எப்படி உதவும்?
உலக அளவில் செயற்கை நுண்ணறிவுக்கான தரவுகளை உருவாக்குவதில் இந்தியா இப்போது ஒரு முக்கிய மையமாக மாறி வருகிறது. டிஜிட்டல் தொழிலாளர் துறை நிபுணரான அதிதி சூரி (Aditi Surie) இதுகுறித்துக் கூறுகையில், "எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த இதுபோன்ற தரவு சேகரிப்பு வேலைகளுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேலான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் மனிதர்களின் இடர்பாடுகளைக் குறைக்க இந்த ரோபோக்களுக்கு இந்தத் தரவுகள் மாபெரும் அடித்தளமாக அமையும்.
பாதிப்புகள் உண்டா?
தற்போதைக்கு ஒரு மணி நேரத்திற்கு கிடைக்கும் 250 ரூபாய் மகிழ்ச்சியை அளித்தாலும், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த மிகப்பெரிய அச்சத்தை இது உருவாக்கியுள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்புகள் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் ஐ.டி, அலுவலகப் பணிகளிலேயே கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 49 கோடி முறைசாரா தொழிலாளர்கள, எளிய கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்பது பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை என இந்திய அரசின் கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், தலையில் கேமராவுடன் சாதாரண இந்தியர்கள் வீட்டு வேலை செய்வது அல்லது பூ கட்டுவது விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், இன்று அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு அசைவும், நாளைய அதிநவீன ரோபோக்களுக்கான வழிகாட்டியாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் மனிதர்களின் கடினமான வேலைகளை எளிதாக்க உதவினாலும், கோடிக்கணக்கான எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக அச்சுறுத்தும் அபாயமும் இதில் ஒளிந்திருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், எளிய மக்களின் வேலைவாய்ப்பும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுப்பது காலத்தின் கட்டாயம்.





















