`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - ...
டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டாலும் கார் தானாக நிற்கும்; அனுமதி வழங்கிய அரசு... விபத்துகள் குறையுமா?!
இந்தியாவில் தானாக இயங்கும் 'டிரைவர் இல்லா கார்' மற்றும் வாகனப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் ரேடார் சென்சார்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற அமைப்புகளுக்கான (Connected-car communication) அலைவரிசை உரிமக் கெடுபிடிகளை (Spectrum Licensing) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையாக நீக்கியுள்ளது.
இதன் மூலம், கார்கள் மோதிக்கொள்வதைத் தடுக்கும் 'ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (Automatic Emergency Breaking)', 'அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் (Adaptive Cruise Control)' மற்றும் 'பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் (Blind-Spot Monitoring)' போன்ற ADAS (Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு வசதிகள் இனி இந்திய கார்களில் எளிதாக இடம்பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

விதிமுறைகள் தளர்வு ஏன்?
இதுவரை, கார்களில் இத்தகைய விபத்துத் தடுப்பு சென்சார்களைப் பயன்படுத்த மத்திய அரசிடம் தனியாகப் பணம் செலுத்தி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் (Spectrum License) பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் வாகன உற்பத்தியில் பெரும் தாமதமும், கூடுதல் செலவும் ஏற்பட்டு வந்தது.
தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, காரின் ரேடார் சென்சார்களுக்குப் பயன்படும் 77GHz-81GHz அலைவரிசைக்கும், வாகனங்கள் மற்றும் சாலை உள்கட்டமைப்புகளுக்கு இடையே அவசரத் தகவல்களைப் பரிமாறும் V2X (Vehicle-to-everything) தொழில்நுட்பத்திற்கான 5.9GHz அலைவரிசைக்கும் இனி தனியாக லைசென்ஸ் பெறத் தேவையில்லை. இந்த புதிய நடைமுறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சர்வதேச விதிகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு என்ன பயன்?
கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகி, அதில் 1.77 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் விற்கப்படும் அதே அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட கார்களை போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற பிரீமியம் கார்களில் மட்டுமே இருந்த உயர்தர பாதுகாப்பு வசதிகள், இனி மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் நடுத்தர விலை கார்களிலும் சாமானிய மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.



















