`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - ...
கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வயது பெண் குழந்தை, நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் அருகில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளரான பிபின் மாஞ்சி (வயது 19) என்பவர், குழந்தையை புதர் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து குழந்தையைப் புதரில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாகத் தகவல் அறிந்த கிராம மக்கள் பிபின் மான்ஜியைப் பிடித்துத் தாக்கி... கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். புதரிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, இன்று காலை உயிரிழந்தது.
அதைத் தொடர்ந்து கொதிப்படைந்த சிறுபுழல்பேட்டை கிராம மக்கள், சிப்காட் பிரதான சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். `கஞ்சா, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்' என வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து முடங்கியதால், மக்களை கலைக்க முயன்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.



















