`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - ...
‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரித்து வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு தற்போது வரை வழங்கபடவில்லை. இதையடுத்து, சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த தகுதி நீக்க மனுக்களும் பின்னர் வாபஸ் பெறப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருந்தனர்.
ஆனால், கட்சித் தலைமையின் மீது நிலவி வரும் அதிருப்தி காரணமாக சி.விஜயபாஸ்கர் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல.
வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதையல்ல; எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்” என பதிவிட்டுள்ளார்.
சி.விஜயபாஸ்கரின் இந்த பதிவு, அதிமுக தலைமையை நோக்கி வைக்கப்பட்ட மறைமுக விமர்சனமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை” என்ற அவரது கருத்து, எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கூறப்பட்டதாக கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.













