மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' - அச்சுறுத்தும் பாலம்... மக்களின் ...
ரூ.80 லட்சம் சம்பளம், ரகசிய திருமணம், ஏ.ஐயால் பறிபோன வேலை: கணவர் தற்கொலையால் மனைவியும் விபரீத முடிவு
பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்ட்வேர் தம்பதி ஒன்று தற்கொலை செய்து கொண்டது. பெங்களூருவில் உள்ள கோதனூர் என்ற இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பானு ரெட்டி(32), பிபி ஷாஜியா(31). இவர்கள் இரண்டு பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதில் பானு ரெட்டி வேலை தேடிக்கொண்டிருந்தார். பிபி ஷாஜியா மட்டும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஷாஜியா இரவு பணிக்கு சென்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது கணவரின் படுக்கை அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் கவலையடைந்த பிபி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே பானு ரெட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்து அப்படியே பிபி அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பானு ரெட்டி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில் தனது தற்கொலைக்கு மனைவி காரணமில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். வேலை இல்லாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டு மன அழுத்தத்தால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 20 நிமிடம் பிபி தனது கணவர் இறந்த அறையில் இருந்தார். திடீரென கிளம்பி லிப்ட் வழியாக 18வது மாடிக்கு சென்றார். அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்துள்ளது. பானு ரெட்டி அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் எ.ஐ. தொழில் நுட்பத்தால் அங்கு அவருக்கு வேலை பறிபோனது.
இதனால் இந்தியாவிற்கு திரும்பினார். பிபியும், பானு ரெட்டியும் தெலங்கானாவை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது குடும்பத்திற்கு தெரியாமல் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பானு ரெட்டியை திருமணம் செய்து கொண்டது பிபி பெற்றோருக்கு கூட தெரியாது. ஆனால் பானு ரெட்டி பெற்றோருக்கு இத்திருமணம் குறித்து தெரியும். அதோடு பானு ரெட்டியின் தந்தை பெரிய அரசியல்வாதியாகும். எனவே தான் தெலங்கானாவில் வசிக்காமல் ரகசியமாக பெங்களூருவில் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
கடந்த 8 மாதங்களாக பானு ரெட்டி பெங்களூருவில் வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அவரது மனைவிக்கு மட்டும் வேலை கிடைத்தது. வேலை இல்லாததால் பானு ரெட்டி மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானார். பானு ரெட்டி ஐதராபாத்தில் ரெட்டி சொந்தமாக வீடு ஒன்று கட்டி வந்தார். அதற்கு அவரால் பணம் ஏற்பாடு செய்யமுடியவில்லை. ரெட்டி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ரெட்டியின் பெற்றோர் அவருக்கு எந்தவகையிலும் உதவி செய்யவில்லை. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இத்திருமணத்திற்கு எதிர்ப்புதான் தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் அவர்களது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு கடந்த 8 மாதத்திற்கு முன்பு பெங்களூரு வந்திருந்தனர். அவர்களது நண்பர்களுக்கு கூட தெரியாமல் அவர்களின் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதாவது பிரசனை ஏற்படக்கூடாது என்று இது போன்று ரகசியமாக வாழ்ந்து வந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது இவர்களின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















