'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரிய...
திருவள்ளூர்: தவெக மா.செ, பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் - அவரின் மனைவி சொல்வதென்ன?
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக-வின் மகளிரணி நிர்வாகி ஒருவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 8.6.2025-ம் தேதி எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியின் திருமண வரவேற்பு விழா திருவள்ளூரில் நடந்தது. அதில் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். அப்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் என்பவர் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார்.
திடீரென அவர் எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதை நான் பலதடவை தவிர்த்தபோதும் என்னுடைய இடுப்பில் கை வைத்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாவட்ட செயலாளர் பிரகாசிடம் தட்டிக் கேட்டபோது அவர் என்னை ஆபாசமாக திட்டினார். அதோடு இரவு முழுவதும் தனிமையிலிருக்க என்னை அழைத்தார்.
உடனே நான் அவரிடம் இதுபோன்று என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இச் செயல் எனக்கு மிகவும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் என்னுடைய கணவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினேன். அதைக் கேட்டு என்னுடைய கணவர் அதிர்ச்சியடைந்தார்.

மறுநாள் என்னை அழைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாவட்டச் செயலாளரிடம் ஏன் என்னுடைய மனைவியிடம் இதுபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டீர்கள் என கேட்டார். அதற்கு மாவட்டச் செயலாளர், நான் என்ன உன் பொண்டாட்டியின் கையை பிடித்து இழுத்தேனா, என பேசியது மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும். நேற்று நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
இச்செயல் எனக்கு மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து உடனடியாக எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தேன். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கட்சித் தலைமை உறுதி அளித்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்று தலைமையில் கூறினர். ஆனால் என்னுடைய புகார் தொடர்பாக கட்சித் தலைமை மாவட்டச் செயலாளர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறேன். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாவட்டச் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸார், ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் மாவட்டச் செயலாளர் குட்டி என்கிற பிரகாசத்தின் மனைவி சுகுணா என்பவர், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என்னுடைய கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் எந்தவித அடிப்படை ஆதாரமின்றி உள்நோக்கத்துடன் கூறியிருக்கிறார். என்னுடைய கணவர் பிரகாசத்துக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்த போதும் பொய்யான குற்றச்சாட்டைசுமத்தினார்கள். 29-ம் தேதி பூந்தமல்லி வேட்பாளராக என்னுடைய கணவர் பிரகாசத்தை அறிவித்ததும் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்கள்.

அதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறோம். அதனால் என் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய மகளிரணி நிர்வாகி மீதும் அவரின் கணவர் மணிகண்டன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாவட்டச் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் என்பவரை அவரின் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸாரிடம் கேட்டதற்கு, ``தவெக மகளிரணி நிர்வாகி கொடுத்த புகாரில் பேரில் மாவட்டச் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறோம். புகார் கொடுத்த மகளிரணி நிர்வாகியிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட குட்டி என்கிற பிரகாசத்திடமும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.


















