`தமிழகத்தில் மின்தடைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் உடனடி அமல்' - ‘RTEP’ என...
வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
இடிபாடுகளில் சிக்கித் தவித்த 9 நபர்களை உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டு மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், 6 பேரை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. காணாமல் போனவர்களை மோப்ப நாய்களின் உதவியுடன் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
மீட்பு குழுவினர் 4 மண்டலங்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கைகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகம், " அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் வசித்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை மற்றும் சேறும் சகதியுமான சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் 2 - வது நாளாக களத்தில் உள்ளனர். உள்ளூர் அரசு பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.




















